ஞானக் குழந்தை நாட்டிய இலக்கியம் வித்யாவாசஸ்பதி டாக்டர் இரா. நாகசாமி ஞானக் குழந்தை அங்கம் ஐந்து பொருளடக்கம் | அங்கம் நான்கு | அங்கம் ஆறு
காட்சி — 9 [கொல்லி மழவன் மகளின் முயலகன் நோய் தீர்த்தல்.] கொல்லி மலைச் சாரல் வாழ் மக்கள், தங்கள் குலப் பெருமை கூறி ஆடிப்பாடுகின்றனர். அவர்களது தலைவன், தன் மகளை அழைத்துக் கொண்டு அங்கு வருகிறான். திடீரென அவளுக்கு முயலகன் நோய் தொத்துகிறது. அப்பெண், நினைவற்றுக் கீழே விழுகிறாள். மழவன் துடிக்கிறான். பாச்சில் என்ற ஊரில் உள்ள கோயிலின் முன் அப்பெண்ணை எடுத்துக் கிடத்துகிறான். அங்கு ஞானசம்பந்தர் வருகிறார். அவரைக் கொல்லிமழவன் வேண்டிக்கொள்ளச் சம்பந்தர், “துணி வளர் திங்கள்” என்னும் பதிகம் பாடுகிறார். சிவபெருமானின் அருளால் முயலகன் நோய் நீங்கிப் பெண் எழுகிறாள். கொல்லி மழவன், சம்பந்தரின் தாளில் வீழ்ந்து வணங்குகிறான். (கொல்லிமலை மக்கள் ஆடிப்பாடல்) கானவர் ராகம் கொல்லிமலைச் சாரலிலே கூடிநாங்கவாழ்ந்து வர்ரோம் ஓடி வேட்டை ஆடிடுவோம் ஒளிஞ்சுமானைப் புடிச்சிடுவோம் கரடிபுலி புடிச்சுவந்து குழந்தை எல்லாம் விளையாடும் காட்டுப் பன்னிமுரட்டு ஆடு விரட்டி விரட்டி அடிச்சிடுவோம் மலைத்தேனை இறக்கிடுவோம் மலைக்காம கள் குடிப்போம் மழவரய்யா எங்கராசா எங்கராசா [பெண்ணுடன் கொல்லி மழவன் வருகிறான். பெண் மயங்கி விழ மழவன் வருந்துகிறான்.] பூபாளம் - ஆதி [கண்டநடை] மழவன்:— எம்பொண்ணுக் கென்னாச்சு காடா ! ஏனிவ இப்படி ஆன ? வள்ளியை நான் வேண்டிக் காடா ! இவ் வள்ளி பொறந்தாளே மாடா ! ஆசையாய் வளத்தேனே காடா ! இப்போ ஆர் செய்த ஏவலோ மாடா! நெஞ்சம் துடிக்குதே காடா ! நான் என்னதான் செய்வேனோ மாடா ! சிந்துபைரவி காடன்:— முசலகன் தொத்திட்டான் மழுவா நீ முக்கண்ணு சாமியை வேண்டு ! மலைப் பொண்ணை மணந்தவ அவரு நம் மலைப் பொண்ணைப் காப்பாத்துவாரு பேச்சு மூச்சில்லாமல் கிடக்கா இவளை பாச்சில் கோயில் முன்னே போடு [சம்பந்தர் வர மழவன் வேண்டல்] சாமி நீ எம்பொண்ணைப் பாரு சாமியை வேண்டிக் காப்பாத்து (சம்பந்தர் பாடல்) பண் தக்கராகம் — ஆதி துணிவளர் திங்கள் துளங்கி விளங்க சடர்ச் சடை சுற்றி முடித்துப் பணிவளர் கொள்கையர் பாரிடஞ் சூழ ஆரிடமும் பலி தேர்வர் அணிவளர் கோலம் எலாம் செய்து பாச்சிலாச் சிராமாத்து உறைகின்ற மணிவளர் கண்டரோ ! மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே
பொருளடக்கம் | அங்கம் நான்கு | அங்கம் ஆறு