pATal67
pATal66.html
pATal67.html
pATal68.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
67. கல்லறைச் சிறப்பு.
கல்லறை — கடாவிட்டுக் கல்லி அறைபடுதலால் பெற்ற நென்மணிகளைக் காட்டுவது.
67. கல்லறைச் சிறப்பு.
தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ்ப் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல்.
(இ—ள்.) தாளாளர் — முயற்சியை யெப்போதுங் கைக்கொண் டிருப்பவராய், எண் திசையும் வளர்ந்த புகழ் பெருக்காளர் — எட்துத்திக்குக்களிலும் பரவிய புகழொடு செல்வப்பெருக்கினையு முடையராய வேளாளர், உலகம் அனைத்து ஆளும் அரசர், வேதியர், புலவர், தளர்ந்த உயிர் இத்தனைக்கும் — உலகமுழுவதையும் ஆளுகின்ற அரசர்கள், பிராமணர்கள், புலவர்கள், தளர்ச்சியடைந்த பிராணிகள் இவ்வளவுபேர்க்கும், அளந்து — நெல்லை அளந்து கொடுத்து,[பின்பு], களம் துவைக்க வை உகுத்த கல்லறைகள் உண்பாரேல் — நெற்போர்க்களத்தில் கடாவிட்டுப் பிணையடித்து உழக்கித் துகைத்தலால் வைக்கோலிலிருந்து சிந்திய கல்போன்ற நெல்மணிகளைச் [சமைத்து] உண்பார்களானால், வளமை — அவர்களுடைய உபகாரத்தன்மையை, உரைப்பார் யார் ஏ — வரையறுத்துச் சொல்லக்கூடியவர் யாவரே? (ஒருவருமிலர்); (எ - று.)
எல்லோர்க்கும் அளந்துகொடுத்தபின் கடாவிட்டு எஞ்சிய கல்லறை நென்மணிகளைக் கொண்டு வேளாளர் உண்பர் என் என்றதால் அவர்கள் உபகாரத் தன்மைக்கு வரையறை யில்லை என்றபடி. “தாளாண்மை யென்னுந் தகைமைக்கட் டங்கிற்றே, வேளாண்மை யென்னுஞ் செருக்கு” என்ற குறளின் கருத்து ஈண்டு நினைக்கத் தக்கது. — (66)