pATal57 pATal56.html pATal57.html pATal58.html ஏரெழுபது மகாகவி கம்பர் 57. போர்க்களம் பாடுதற் சிறப்பு.
பொருளடக்கம் | 56. போர்செய்தற் சிறப்பு. | 58. போர்க்களச் சிறப்பு. | அகெடமி

57. போர்க்களம் பாடுதற் சிறப்பு. வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்தன்று தளம்பாடுந் தாரகலத் தாடாளர் தம்முடைய களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே. (இ—ள்.) வளம் பாடும் குடை மன்னர் — வள்ளற்றன்மையைக் குறித்து(ப் புலவர்களாற்) பாடப்பெற்ற நல்லரசாட்சியைப் பூண்ட அரசர்கள், மதம் யானை பட பொருத — மதயானை இறந்து விழும்படி போர்புரிந்த, களம் — போர்க்களத்தை, பாடும் — பாடுவ தனாற்பெறுகின்ற, பெருஞ் செல்வம் — மிக்க செல்வமானது, காசினியில் — இவ்வுலகிலே, சிறந்தன்று — சிறந்ததாகாது; (பின்னை எது சிறந்த செல்வ மாகுமெனின்?-), தளம் — இதழ்களிலே, பாடும் — (வண்டுகள்) ஒலிக்கப்பெற்ற, தார் — (குவளை) மலர் மாலையையணிந்த, அகலம் — மார்பையுடைய, தாடாளர் தம்முடைய — முயற்சியையெப்போதுங் கைக்கொண்டிருப்பவரான வேளாளர்களுடைய, களம் — நெற்போர்க்களத்தை, பாடும் — பாடுவதனாற் பெறுகின்ற, பெருஞ் செல்வம் — மிக்க செல்வமானது, காசினியில் — இந்நிலவுலகத்தில், சிறந்தது — சிறந்ததாகும்; (எ - று.) யுத்தகளத்தைக் குறித்துப் பாடும் பாடல் அமங்கலத்தைக் குறிப்பதாதலாலும் அதனாற் பெறும் பொருட்செல்வம் நேரே உணவிற்கு உதவாமையாலும், அச்செல்வம், மங்கலங்குறித்துப் பாடுவதும் நேரே உணவிற்கு உதவுவதுமாகிய ஏர்க்களம் பாடிப் பெறுகின்ற பெருஞ்செல்வம் போலாது என்றார்: ஏர்க்களம் பாடிப் பெறுஞ்செல்வம் — விளைந்த நெல்லின் வடிவமான செல்வம். சிறந்தன்று — சிறந்ததன்று என்பதன் விகாரம். பாடப்படுகின்ற போர்க்களச்சிறப்பையும், ஏர்க்களச்சிறப்பையுமே பாடும் பெருஞ்செல்வமென்றா ரென்றலும் ஒன்று. தாளாளர் என்ற சொல்லில், ளகரத்துக்கு டகரம் போலியாகி, “தாடாளர்” என வந்தது. — (57)
பொருளடக்கம் | 56. போர்செய்தற் சிறப்பு. | 58. போர்க்களச் சிறப்பு. | அகெடமி