pATal43 pATal42.html pATal43.html pATal44.html ஏரெழுபது மகாகவி கம்பர் 43. பைங்கூழ்ச்சிறப்பு.
பொருளடக்கம் | 42. புழுதிச்சிறப்பு. | 44. பயிர்க்குத் தண்ணீர் பாய்த்துதற்சிறப்பு. | அகெடமி

43. பைங்கூழ்ச்சிறப்பு. கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர் ஒட்டாரென் றொருவரையும் வரையாத வுயர்நலத்தோர் பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை நட்டாரே வையமெல்லாம் நலந்திகழ நட்டாரே. (இ—ள்.) கெட்டாரை — (தரித்திரத்தினால் நுகரும் பொருளின்றி) அழிபவரை, தாங்குதலால்—, கேடு படா — அழிவுபடாத, தொழில் — உழவுத் தொழிலைக்கொண்ட, குலத்தோர் — குலத்திற் பிறந்தவரும், ஒட்டார் என்று — பகைவரென்று, ஒருவரையும் — எவரையும், வரையாத — நீக்காத, உயர் நலத்தோர் — சிறந்த குணத்தை யுடையவருமான வேளாளர், பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் — உண்மையான நூல்களையே பயிலும் ஞானிகட்கும், பசி அகல — பசி நீங்கும்படி, பைங்கூழை நட்டாரே — பசுமையான பயிரை நட்டவரும், வையம் எல்லாம் நலம் திகழ நட்டாரே — பூமியிலுள்ளார் யாவர்க்கும் நன்மையை விளங்கும்படி நிலைநிறுத் தியவருமாவர்; (எ - று.) வேளாளர் நடுதற்றொழில்செய்வது, உண்மை நூலை யோதும் பெரியோர்க்கும் மற்றுமுள்ள உலகத்தவர்க்கும் பசி தணியக் காரணமா மென்றவாறு. முன்னிரண்டடிகள் வேளாளர்க்கு உள்ள மேன்மையைத் தெரிவிக்கும். நட்டாரென்ற சொல் இரண்டனுள், முதலது “நடு” என்ற பகுதியினடியாகப் பிறந்த இறந்தகாலவினை யாலணையும்பெய ரென்றும், இரண்டாவது — “நள்” என்ற பகுதியி னடியாப்பிறந்த அவ்வகையான வினையாலணையும்பெய ரென்றுங் கொண்டு உரைத்தலு மொன்று. கெட்டாரைத் தாங்குவதுபற்றிப் பயிர்த்தொழிற்கு “கேடுபடாத்தொழில்” என ஒருபெயர் கொடுத் தார்: “பழுதுண்டு வேறோர் பணிக்கு” என்றதும் நோக்குக. “ஒருவகையும்” என்றும் பாடமுண்டு. — (43)
பொருளடக்கம் | 42. புழுதிச்சிறப்பு. | 44. பயிர்க்குத் தண்ணீர் பாய்த்துதற்சிறப்பு. | அகெடமி