pATal14 pATal13.html pATal14.html pATal15.html ஏரெழுபது மகாகவி கம்பர் 14. உழவெருதின்சிறப்பு.
பொருளடக்கம் | 13. தாற்றுக்கோற் சிறப்பு | 15. உழவெருதின் சுவற்கறைச் சிறப்பு | அகெடமி

14.-உழவெருதின்சிறப்பு. வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. (இ—ள்.) வானம்மேகமானது, மழை பொழிந்தாலும் — (பெய்வதற்கு உரிய காலத்துத் தவறாமல்) மழையைப் பெய்தாலும், படுவது — (இவ்வுலகத்து உயிர்கட்குவேண்டும்) வளப்ப முண்டாவது, எவராலே? ஞானம் மறையவர் வேள்வி — நல்லறிவையுடைய அந்தணர்களது யாகங்கள், நலம் பெறுவது — நன்மையையடைவது, எவராலே-? சேனை கொடு பொரும் (தமது) சேனைகளைக்கொண்டு போர் செய்கின்ற, மன்னர் — அரசர்களது, செரு களத்தில் — போர்க்களத்திலே, செகுக்கும் — (பகையை) அழிக்குந்தன்மையுள்ள, மதம் யானை — மதங்கொண்ட யானைகளினது, வலி — வலிமை, எவராலே-? இவர் — இவ்வேளாளரது, எருத்தின் — உழவெருதுகளினுடைய, வலியாலே — வலிமை யினால்தான், (உண்டாகின்றன); (எ - று.) வினைச்சொல் வருவித்துமுடிக்கப்பட்டது. இவர்எருத்தால் என்னாமல் “இவரெருத்தின்வலியால்” என்றது - உடையார்தன்மையை உடைமையின் மேலேற்றிக் கூறிய உபசாரவழக்கின்பாற்படும். வானம் மழைபொழிந்தாலும் வேளாளர் எருதுகளைக் கொண்டு உழுது பயிரிட்டாலன்றி, உலகத்துயிர்கட்கு வேண்டிய உணவு அகப்படாமை வெளிப்படை. மிகப்பெரிய யானைகள் கவளம் முதலியனபெற்று உண்ணுதலும் வேளாளர் உழவுத் தொழிலினா லென்பதும் தெற்றென விளங்கும். வானம்இடவாகுபெயர். பொழிந்தாலும், உம்மை — உயர்வு சிறப்பு: எருதின்வலிமை இல்லாவிடின் பொழிந்தும்பயனில்லை யென்பது குறித்து நின்றது. ஞானம்ஜ்ஞாநம்: வடசொல். கொடு = கொண்டு: தொகுத்தல். “செகுக்கும்” என்ற பெயரெச்சத்தில், செகு - பகுதி. எருத்தின் — எருதின் என்பதன் விரித்தல். — (14)
பொருளடக்கம் | 13. தாற்றுக்கோற் சிறப்பு | 15. உழவெருதின் சுவற்கறைச் சிறப்பு | அகெடமி