pATal12
pATal11.html
pATal12.html
pATal13.html
ஏரெழுபது
மகாகவி கம்பர்
12. கொழுவாணிச் சிறப்பு.
கொழுவாணி — கலப்பைமுனையில் கொழுவை வைத்துத் தைத்திருக்கும் ஆணி.
12. கொழுவாணிச் சிறப்பு.
செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுவார நிலமடந்தை கீழ்நீர்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே.
(இ—ள்.) செழு வானம் — செழிப்புள்ள வானமானது, மழை வாரி — மழை நீரை, திங்கள்தொறும் — மாதந்தோறும், பொழிந்தாலும் — பொழிந்து வந்தாலும், கெழு ஆர — செழிப்புப்பொருந்த, நிலமடந்தை — நிலமகள், கீழ் நீர்கொண்டு எழுந்தாலும் — கீழ்நீர்ப்பாங்குகொண்டு சிறந்திருந்தாலும், வழுவாத — தவறாமல் பெருக் கெடுத்துவருகின்ற, காவேரி வளம்நாடர் — சோழநாட்டாளரான வேளாளர், உழு — உழுவதற்குக்கருவியாகும், கலப்பை — கலப்பையின், கொழு — கொழுவின், ஆணிகொண்டு அன்றி — ஆணியினா லல்லாமல், குவலயம் — இந்தப்பூமி, சீர் நிரம்பாது — சிறப்பு நிரம்பப்பெறாது; (எ - று.)
மழை சரியானபடி பொழிந்துவந்தாலும், கீழ்நீர்ப்பாங்கான பூமியிலிருந்து வேண்டும் ஊற்றுநீர் கிடைப்பதா யிருந்தாலும், உழவர் கொழுவாணி யிராவிட்டால் கலப்பைகொண்டு பூமியை யுழமுடியாதாதலால், பூமியில் தானியம் மிகுதியாகக் கிடைக்காது; அதனால், இப்பூமி உழப்பட்டுச் சீர்ப்படுதற்குக் கொழுவாணி அவசியம் வேண்டியதாகு மென்க. கெழு வாரம் எனப்பிரித்து — (உயிர்களிடத்து) விளங்குகின்ற அன்பைக் கொண்ட எனினுமாம். குவலயம் — தற்சம வடசொல். — (12)