ஆயிரம் கலை கண்ட
அருள்மொழியே வாழி
டாக்டர் இரா. நாகசாமி
அருண்மொழியின் திருமணம்
பொருளடக்கம் |
ஐந்தாம் அங்கம்
மதுராந்தக உத்தம சோழர் அருண்மொழிவர்மனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். “தந்தி சக்தி விடங்கி” என்ற இயற்பெயரும் “லோக மகா தேவி” என்ற பட்டப் பெயரும் உள்ள பெண்ணை அருண்மொழி மணக்கிறான். திருமண விழா மரபுவழிப்படி பெரும்பாலும் நாட்டிய முத்திரைகளால் நடித்துக் காட்டப்படும். மங்கல வாழ்த்தொலிகள், அம்மி மிதித்தல், அருந்ததி காணல் முதலிய இதில் இடம் பெறும். நாதசுர இசை இங்கு இசைக்கப்படும். அருண்மொழியின் கல்யாண வைபவத்தில் ஊஞ்சல் பாட்டு.
ஊஞ்சல்
(இராகம்- குறிஞ்சி)
தந்தி சக்தி விடங்கி எனும்
வஞ்சி இளங்கொடியே
அந்தமிலா பந்தமுடன்
அருண்மொழியிற் படர்ந்து ..... 1
லோக மாதேவி
உந்தன் தேகசுகம் வேண்டி
மோக மிகவே அணைந்து
போகமது துய்த்திட ..... 2
கரதலத்தின் மென்மையினால்
அருண்மொழியின் புஜத்தை
அருளுடைய தாக்கியே
ஆட்சி செலுத்திட ..... 3
சோழரது கல்வெட்டுகளில் மெய்க்கீர்த்தி என்ற பகுதி உண்டு. அவற்றில் அரசன் தன் தேவி அருகிலமர்ந்து விளங்குவதால் அருளாட்சி புரிந்தான் என்று கூறும் பகுதிகள் பல உள்ளன. அது இங்கே குறிக்கப்படுகிறது.
மங்களப் பாடல்
(இராகம்-குறிஞ்சி)
சோழகுல தீபனுக்கு
சுந்தரகுமாரனுக்கு
நித்தியவிநோதனுக்கு
நாண் மங்களம் ..... 1
திருமகளின் தேவனுக்கு
நிலமகளின் நாதனுக்கு
கலைமகளின் கேள்வனுக்கு
நாண் மங்களம் ..... 2
பொன்னியின் புதல்வனுக்குக்
கன்னியைப் புணர்ந்தவற்குச்
சென்னிகுலச் செல்வனுக்கு
நாண் மங்களம் ..... 3
தந்திசக்தி விடங்கி யுடை
தளிர்க் கரத்தைத் தரித்தவற்கு
சந்தத் தமிழ் கண்டவற்கு
நாண் மங்கலளம் ..... 4
ஒரு பெண்ணை மணக்க விரதம் மேற்கொண்டு கரத்திலே மங்கல நாண் தரித்துத் திருமணம் புரிவது மரபு. அம்மங்கல விழாவில் “ஆரத்தி” எடுத்தலும் மரபு. அதற்குரிய பாடல் இது.
(நான்காம் அங்கம் முற்றும்)
பொருளடக்கம் |
ஐந்தாம் அங்கம்