pATal63 pATal62.html pATal63.html pATal64.html ஏரெழுபது மகாகவி கம்பர் 63. கூடைச் சிறப்பு.
பொருளடக்கம் | 62. நெற்குவிததற் சிறப்பு. | 64. பொலிதூற்றுங் கூடைச்சிறப்பு. | அகெடமி

63. கூடைச் சிறப்பு. ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும் ஓடையா னையினெருத்தத் துயர்ந்துலகந் தாங்குதலும் பேடையோ டன நீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர் கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. (இ—ள்.) (அரசர்கள்), ஆடை ஆபரணங்கள் அணிந்து — பட்டாடைகளையும் (பொன்னினாலும், இரத்தினங்களினாலும் அமைந்த) அணிகலங்களையும் தரித்து, முடி சுமந்திடலும் — கிரீடத்தை(ச் சிரமீது) கவித்துக் கொண்டிருத்தலும், ஓடை யானை யின் — நெற்றிப்பட்டத்தினையுடைய யானையின், எருத்தத்து — பிடரியிலே, உயர்ந்து — மேலேறியிருந்து, உலகம் தாங்குதலும் — உலகத் தைப் பாதுகாப்பதும், (ஆகிய இவை), —பேடையோடு — பெண்ணன்னப்பறவையோடு, அனம் — ஆணன்னம், நீங்கா — விட்டுநீங்காது தங்கப்பெற்ற, பெருங் கழனி — பெருமைபெற்ற கழனியையுடைய, பெருக்காளர் — செல்வப் பெருக்கைக் கொண்ட வேளாளரின், கூடை யானது—, கையில் கொண்டு — கையிலே கொள்ளப் பெற்று, களம் புகுந்திடினே — களத்திற் புகுந்தால்தான், (உண்டாகும்); (எ - று.) வினைமுற்று வருவித்துமுடிக்க. நெல் இல்லாவிடின் அரசரின் ஆட்சியும் இனிது நடவாதென்க. நெல்லை யெடுத்துச் செல்லுமாறு கொண்டுபோகுங் கூடை, இங்குக் கூறப்பட்டது. அனம் = அன்னம்: தொகுத்தல். கூடையானது என்பதில், ஆனதுபகுதிப் பொருள் விகுதி: முதல்வேற்றுமைச் சொல்லுருபு எனினுமாம். “எருத்த முயர்ந்துலகம்” என்றும் பாடம்: அதுகொளின், அத்துச் சாரியை கெட்டதென்க. — (63)
பொருளடக்கம் | 62. நெற்குவிததற் சிறப்பு. | 64. பொலிதூற்றுங் கூடைச்சிறப்பு. | அகெடமி