#6B8E23
எய்தான் மான் மறியை
டாக்டர் இரா.நாகசாமி
27-Mar-2007
முதலாழ்வார் மூவரில் மூன்றாவதாக குறிக்கப்படுபவர் பேயாழ்வார். இவரும் இராமனைப் பாடுகிறார்.
எய்தான் மராமரம் ஏழும் இராமனாய்;
எய்தான் அம் மான் மறியை ஏந்திழைக்கு ஆய்; எய்ததுவும்
தென் இலங்கைக் கோன் வீழ; சென்று குறள் உரு ஆய்
முன் நிலம் கைக்கொண்டான், முயன்று.
முதல் வரியில் இராமன் ஏழு மராமரங்களை அம்பால் எய்தது தனது வலிமையைக்காட்ட. இரண்டாவது வரியில் அழகான மானை எய்தது மென்மையான சீதைக்காக. வலிமை காட்ட மரமும் மென்மை காட்ட மானும் கூறினார். ஆனால் அது உண்மை மான் அல்ல. தன் உருவை மாற்றி வந்த மாரீசன் என்னும் அரக்கன். அதை சூசகமாக கூறுகிறார் "மான் மறி" என்று. இராவணனை எய்தது தனது வலிமையைக் காட்டவும் சீதையை விடிவிக்கவும் என இரண்டுக்காகாவும். இராவணன் கோன் என அழைக்கப்பட்டுள்ளதால் அவனுக்கு தன் வலியைக்காட்டியும் மெல்லியலாள் சீதையை விடுவிக்கவும் என இரண்டு காரணங்களுக்காகவும் எய்தது என்ற பாங்கை பாடலால் தொனிக்கிறார். இவர் யார் எனில் முன்னர் வாமனா அவதாரத்தில் குறள் (குள்ள) உருவில் வந்து மூவுலகும் கொண்டவர் தாம் என்கிறார்.
ஆதலின் அவதாரங்களின் பெருமையும் முழுதும் அறிந்து ஆழ்வார் பாடிய பாட்டு இது என்பதால் இராமர் வழிபாடு தமிழ்நாட்டுக்கு புதியது அல்ல என்பதும் இராம பக்தி இங்கு சிறந்து இருந்ததும் தெளிவாகிறது.