chap7 chapter6.html chapter7.html chapter8.html செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி 7. சேக்கிழார் சித்திரிக்கும் தமிழர் திருமணம்
பொருளடக்கம் | அத்தியாயம்-6 | அத்தியாயம்-8 | அகெடமி

இணை சொல்லமுடியாத வரலாற்றுக் காப்பியம் திருத்தொண்டர் புராணம். இதில் சுந்தரமூர்த்தி நாயனாரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் சேக்கிழார், இந்தப் பகுதியில் தமிழர் திருமண மரபுகளை நமக்கு விரிவாகக் காட்டுகின்றார். சுந்தரர் வைதிக சைவ அந்தணர் குலத்தில் பிறந்தவர். அவர் சிறுவனாக இருந்தபோது அந்நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் என்பவரால் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். தனது மகன்போல ஏற்றுக்கொள்ளுதல் மரபு ஆதலினால் சுந்தரர் அந்தணர் மரபிலும் அரச மரபிலும் வளர்ந்தவர் என்று சேக்கிழார் கூறுகிறார். அக்காலத்து மாப்பிள்ளை மணக்கோலத்தில் பெண் வீட்டிற்குச் சென்று அங்கு முறைப்படி மணந்துகொள்வது மரபு. மணப்பெண் வீட்டினர் மணவிழாவைக் கொண்டாடும்விதமாக பூப்பந்தல் அமைத்து, பலவிதமாக அலங்கரித்து, மணநாளின் முந்திய நாள் மாப்பிள்ளைக்கு மந்திரவிதிப்படி பொன்னால் செய்த காப்பு அணிவிப்பார்கள். திருமண நாளன்று சடங்குகள் எல்லாம் செய்தனர் என்பதை சேக்கிழார், “மாமறைவிதி வழாமல் மணத்துறை கடன்கள் ஆற்றினர்” என்கிறார். பின்னர் கணிதநூல் புலவர் குறித்துக்கொடுத்த திருமண நேரம் வருவதற்கு முன்பாக மணமகனுக்கு திருமஞ்சனநீர் ஆட்டுவித்து பட்டாடை புனைந்து பன்னீரில் சந்தனக்கலவை சாத்தி மணக்கோலம் பூணச் செய்வர். பின்னர் மங்கல கீதம் முழங்க, மகளிர் சூழ, மறையவர்கள் மந்திரம் ஒலிக்க திருமணப்பந்தலுக்குள் மணமகன் வந்து அமர்வார். அவ்வாறு சுந்தரர் வந்ததை சேக்கிழார், “நிறைகுடம் தூபம் தீபம் நெருங்கு பாலிகை ஏந்தி நறைமலர் அருகு சுண்ணம் நறும்பொரி பலவும்வீசி உறைமலி கலவைச் சாந்தின் உறுபுனல் தெளித்துவீதி மறையவர் மடவார் வள்ளல் மணம் எதிர்கொள்ள வந்தார்” என்று விளக்குகிறார். இந்த எழில் மிகு காட்சியை சேக்கிழார் காட்டியப் பின்னர் சிவபெருமான், சுந்தரரை தடுத்தாட்கொண்டதை விரித்து எழுதிச் செல்கிறார். சுந்தரர் திருமணவிழா குறித்து பெரியபுராணத்தில் சேக்கிழார் குறித்துள்ள அனைத்தும் சங்ககால அகப்பாட்டில் கூறப் பட்டுள்ளவை என்பதைக் காண முடிகிறது. தமிழ் மரபில் மணவினை என்பது சங்ககாலம் தொட்டு இன்றுவரை ஒன்றுபோலவே நடைபெற்று வருகிறது என்பதைக் காண்கிறோம். ஒரு மாபெரும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் காண்கிறோம். ஒரு மனித வாழ்வில் திருமணம் என்பது மிகவும் இன்றியமையாத நிகழ்ச்சி. அதில் ஒவ்வொரு அங்கமும் அனைவர் உள்ளத்திலும் மங்கல நிகழ்ச்சியாகவும் இன்பம் பயப்பதாகவும் இருத்தல் வேண்டும். இதுவே ஈராயிரம் ஆண்டுகளாக காலந்தோறும் நம்மிடையே வளர்ந்து வந்துள்ள பண்பு. இதையே வரலாற்று ஆசிரியர் 'தமிழ் பண்பு' என்பர். இத்தகைய இன்பமான நினைவுகள் தரும் மணவிழாவை அரசியல் மேடையாகவோ, அரசியல் எதிரியைத் தூற்றும் வாய்ப்பாகவோ பண்புள்ள எவரும் பயன்படுத்தமாட்டார்.
பொருளடக்கம் | அத்தியாயம்-6 | அத்தியாயம்-8 | அகெடமி