நந்திக்கலம்பகம்
டாக்டர். இரா. நாகசாமி
தமிழ் இலக்கியங்களில் நந்திக்கலம்பகம் என்னும் நூல் ஒரு அத்புதமான இலக்கிய நூல் மட்டும் அல்ல. நல்ல ஒரு வரலாற்று நூலாகவும் திகழ்கிறது. சொல் சுவையும் பொருள் சுவையும் நிறைந்தது. படிக்கப் படிக்க இன்பம் பயப்பது. ஆதலின் நல்ல தமிழ் இலக்கியச் சான்றோர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நூல் 113க்கும் மேல் பாடல்களைக் கொண்டது. இப்படல்கள் பெரும்பாலும் இன்பச்சுவையை அடிப்படையாக கொண்டவை.
பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் என்பவனை சிறப்பித்து இயற்றப்பட்டது. ஒவ்வொரு பாட்டிலும் நந்தியின் புகழ் கூறப்படுகிறது. இவனது குணங்கள், ஆர்வம், வெற்றிகள், பட்டப்பெயர்கள் எல்லாம் இதில் இடம் பெறுகின்றன. இவை இவனது கல்வெட்டுகளிலும் செப்பேடுகளிலும் காணப்படுவதால் ஒப்பற்ற வரலாற்று நூலாகவும் மலர்கிறது.
மூன்றாம் நந்திவர்மன் என்பவன் ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ண்டவன். தந்திவர்மன் எனபவனின் மகன். இவன் சங்கா என்ற தாயின் வயிற்றில் உதித்தவன். இவன் அடைந்த வெற்றிகளில் தெள்ளாறு என்ற இடத்தில் அடைந்த வெற்றி புகழ் வாய்ந்தது..
இந்நூலின் வயிலாக அறியப்படும் சில செய்திகள்:
அவனி நாரணன் 18,22 etc
உக்ரம கோபன் 24
நயபரன் 11
விடேல் விடுகு 17
கண்டன் 14
விரதீரன்31
விறலவிர் கஞ்சுகன் 31
குவலய மார்த்தாண்டன்33
சந்திரகுலப் பிரகாசன்
ஏகராஜன் (ஒரு கோமகன்)
மானோதயன் 52
தேச பண்டாரி 91
வரதுங்கன் 94
ஏகத்தியாகி 104
நந்திபரன் 109
நந்தி சீராமன் 110
மானபரன் 112
முதலிய வடமொழிப் பட்டங்களும் தமிழில்
அடல் ஏறு வலத்துயர் வைத்த பிரான் 59
பிறைதவழ் செஞ்சடைப் பிரான் பிறங்கல் நாரணன் 70
அறைகழல் முடித்தலை அவனி நாரணன் 70
பண்டை மராமரம் எய்த பல்லவன் 87
அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன் 64
சிவனை முழுதும் மறவாத சிந்தையான் 101
மழை போல் வழங்கு கரத்தான் 111
ஏழைமார் துணை நந்தி 25
ஒண் சுடர் போன்ற மன்னவன் 40
பல்லவர் கோன் 19
கச்சி வளநாடன்
மயிலைக் காவலன்
தொண்டை வேந்தன் போன்ற பட்டங்களும் இவனுக்கு இருந்தன.
இம்மன்னன் நல்ல தமிழ் பற்று மிகுந்தவன் என்று பல பாடல்கள் கூறுகின்றன.
தொல்லை நூல் வரம்பு முழுதும் கண்டான்(7), பைந்தமிழை ஆய்கின்ற கோன் நந்தி (108), தமிழ் நந்தி (111), நூற்கடல் புலவன்30, என்றெல்லாம் இப்பாடல்கள் கூறுகின்றன.
மலைகடாம் பாட்டு
இந்நூலில்
"மலைகடாம் பாட்டனைய மால் யானை நந்தி
முலைகடாம் பட்டசையா முன்" (102)
என்று ஒரு அடி வருகிறது. சங்கப் பாடல்களில் பத்துப் பாட்டில் மலைபடு கடாம் என்று ஒரு நெடும்பாடல் உண்டு. அதை சோழர் காலக் கல்வெட்டு "மலை கடாம் பாட்டு" என்ற பெயரால் அழைக்கிறது. ஆதலின் அப்பாடலின் பண்டைய பெயர் மலை கடாம் பாட்டு என்றே இருக்கக் கூடும் என முன்னர் நான் எழுதி இருக்கிறேன். நந்திக்கலம்பகத்திலும் அதே பெயர் காணப்படுவதால் அதன் பெயர் "மலைகடாம் பாட்டு" எனெவே இருத்தல் வேண்டும் எனில் தவறாகாது. தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் மலைகடாம் பாட்டை படித்திருந்தான் என இதன் வாயிலாகக் கூறலாம். ஆதலின் சங்கத்தமிழ் இவன் காலத்தில் படிக்கப்பட்டது எனவும் அறிகிறோம்.
நந்தி தமிழில் மிகுந்த ஆர்வம் பெற்றிருந்தான் என்பதற்க்கு மற்றும் ஒரு சான்றும் உண்டு. மாற்றரசர் மீது இவன் வெகுண்ட போது இவன் மீது அவர்கள் கோவை பாடி தங்கள் நாட்டைத் திரும்பப் பெற்று அரசர்களாகவே திகழ்ந்தார்கள். என
"நந்தி தடங்கைப் பூபாலன் மேல் தன் கோவை பாடி
அடங்க பூபாலர் ஆனார்." 96
எனப் பாடல் கூறுவது இதைக் காட்டுகிறது
சிவனடியை மறவாத சிந்தையான்
மேலும் இந்நூல் இவனை சிவனடியை என்றும் மறவாத சிந்தையான் எனக் கூறுகிறது. வேலூர் பாளையம் செப்பேடு இவனால் வழங்கப்பட்டது. இவன் "ஹர சரண ஸரோஜ உத்தம்ஸ சின்னஹ" என அரனின் திருவடித்தாமரைகளை தலையில் தரித்தவன் என அச்செப்பேடு கூறுகிறது. செப்பேட்டுச் செய்தியை இந்நூலும் கூறுவதிலிருந்து இது வரலாற்று நூல் என்றும் அறியமுடிகிறது.
தெள்ளாற்றெறிந்த நந்திவர்மனின் வெற்றிகள்:
இவனது தந்தை தந்திவர்மன் இறந்த உடன் இவன் அரசுகட்டில் ஏறியிருக்கிறான். ஆனல் இவனது உடன்பிறந்தார் பல்லவ சிம்மாசனத்தை கைப்பற்ற தாங்கள் விழைந்தனர். ஆதலின் சோழர் பாண்டியர், சேரர் ஆகிய அரசர்களுடன் சேர்ந்து கொண்டு வந்தவாசிக்கருகில் உள்ள தெள்ளாறு என்ற இடத்தில் இவனுடன் பெரும் போர் புரிந்தனர். தெள்ளாற்றுப் போர் மிகவும் கடுமையாக இருந்தது. அப்போரில் எதிர்த்த அனைவரையம் இவன் வென்றான். ஆதலின் இவனுக்கு தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்பது பட்டப்பெயராயிற்று. அவ்வெற்றியை இந்நூலில் பல பாடல்கள் கூறுகின்றன.
தெள்ளாற்றுப் போர்
தெள்ளாற்றுக் கண் சிவந்தான் 42,
கூடலர்க்கு தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த கோமுற்றப் படை நந்தி,
குலவீரர் களம் அழியத் தம்பியர் எண்ணம் எல்லாம் பழுதாக வென்ற தலை மான வீரத்துவசன் 85
இம்மன்னனுடைய பல கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றில் இவன் தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்திப்பொத்தரசன் என இவன் அழைக்கப்படுகிறான். இவனது அனைத்துக் கல்வெட்டுகளும் இவனை தெள்ளாற்றெறிந்த நந்திவர்மன் என்றே அழைக்கின்றன. இவை அனைத்துமே வரலாற்றுச் செய்திகள். வரலாற்றுச் செய்திகளையும் அவனது வெற்றிகளையும் கூறவந்தது இந்நூலென்பது தெளிவு.
தெள்ளாற்றுப் போரில் தென்னன், சோழர், சேரர், இவனது தம்பியர் அனைவரும் எதிர்த்தனர் என்பதை இப்பாடல்கள் குறிக்கின்றன.
கடம்பூர் வெற்றி
தெள்ளாற்றுப்போர் இவனுக்கு வெற்றியைக் கொடுத்தபோதும், தொடர்ந்து எதிரிகள் காட்டுமன்னார்குடி என்னும் ஊருக்கு அருகில் உள்ள கடம்பூர் என்ற இடத்தில் மீண்டும் போர்க்குரல் எழுப்பினர். அங்கும் எதிரிகள் அனைவரையும் இம்மன்னன் வெற்றி கொண்டிருக்கிறான் என்ற செய்தியை இந்நூல் தான் நமக்கு கூறுகிறது.
தெள்ளாற்றில் ... எதிர்ந்தார் தம்முன் மருளாமே
நன்கடம்பூர் வானேற வளைந்து வென்ற மன்னர் ஏறு 90
இகல் கொண்டார் இருங்கடம்பூர் விசும்புக்கேற்றி எயில் கொண்டான் 29
என்றெல்லாம் இப்பாடல்கள் கூறுகின்றன.
வெறியலூர்ச் செரு வென்றான்
என்று சில பாடல்கள் கூறுவதால் அங்கும் இவன் வெற்றி பெற்றான் என அறிய முடிகிறது.
பழையாறு வெற்றி
இதைத் தொடர்ந்து கும்பகோணத்து அருகில் புகழ் வாய்ந்த பழையாற்றில் மீண்டும் போர் தொடர்ந்திருக்கிறது. அங்கும் இவன் மாற்றார்களை கடுமையாகப் போரிட்டு வென்றிருக்கிறான் என இந்நூலால் தான் அறிகிறோம்.
கூடார் படையாறு சாயப் பழையாறு வென்றான் 35
பழையாற்றிலும் அதன் அருகிலும் இவனுடைய பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. அவை அப்பகுதியை இவன் வென்றதை உறுதி செய்கின்றன. தனது பெயரால் இவன் அங்கு அவனிநாரணச் சதுர்வேதிமங்கலம் ஏற்படுத்தியுள்ளதை கல்வெட்டுகள் கூறுகின்றன. சோழநாடு முழுதும் இவனது கல்வெட்டுகள் காணப்படுவதால் அப்பகுதி முழுவதும் இவன் ஆட்சியில் இருந்தது என்பதில் ஐய்யம் இல்ல. இந்நூலில் இவன் சோணாடன் என்றே அழைக்கப்பெறுவது இதயே குறிக்கிறது.
சோணாடன்
சோழநாட்டின் மீது இவன் ஆட்சியை இந்நூலில் பல பாடல்கள் பலவிதத்தாலும் புகழ்கின்றன.
"உறந்தையர் கோன் 48,
காவிரியில் குலவும் புயல் கண்டு புகார் மணலில் பெருகோடு நெடுங்கழி சூழ்,
மயிலைப்பெருமான் 48,
பொன்னி நல்நாட்டு மன்னன் 62,
கவரிச் செநெல் காடணி சோலைக் காவிரி வளநாடன்,
காவிரிவளநாடன் 21,
சோணாடன்" 9,
என பாடல்களைப் பார்க்கிறோம். திருச்சிவரை தனது ஆட்சியை வித்தரித்த இம்மன்னன் அதன் தெற்கிலும் பாண்டியர்களை துரத்திச்சென்று வெற்றிகண்டிருக்கிறான். அதையும் இந்நூலே குறிக்கிறது.
தொல்லை அலங்கலில் முந்நீரும் கொண்ட வேந்தர் கோன் நந்தி 9
தென்னவர் கோன் தன் குறும்பிற் சென்று சூழ்ந்த பகைவர் உடல்
துண்டம் ஆகத் துயில் உனர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தன் 8
பாண்டியரை வென்றது
பாண்டியர் மீது இவன் கொண்ட வெற்றிகளில் சிறப்பாக இந்நூலில் இரண்டு குறிக்கப்படுகின்றன. பாண்டியரது துறைமுகமாகத் திகழ்ந்த தொண்டி நகரை இவன் கைப்பற்றியுள்ளான். அத்துடன் குருக்கோட்டை என்ற ஒரு இடத்திலும் இவன் வென்றதை பல பாடல்கள் கூறுகின்றன.
தென்னன் தொண்டி நகரங் கைப்படுத்த பிரான் 42
குருக்கோட்டை குறுகா மன்னர் போர்க்கின்ற புகர் முகத்து குளித்த வாளி,
பூதலத்து வடிம்பலம்ப பூண்ட வில்லோன் 39
"வடிம்பலம்ப பூண்ட வில்லோன்" என்ற சொல் வடிம்பலம்ப நின்ற பாண்டியனை நினைவு படுத்தும்.
ஆதலின் தெள்ளாற்றில் தொடங்கி பகையரசர்களை படிப்படியாகத் தொண்டி வரை வெற்றிகண்ட பெருமன்னன் இவன். ஆதலின் இவனை இந்நூல் பல பாட்டுகளில்
தென்னாடுடை மன்னன்,
குணக்கினோடு வடக்குடையான் நந்தி 69,
குடக்குடை வேந்தன்,
தங்கோல் வளைத்த திகழ் சேரர் சோழர் தமிழ் மன்னர்,
நின்ற நிலமேல் செங்கோல் நிமிர்த்த வரையும் சிவந்த விறல் நந்தி 46,
குடங்கை போலும் அரசர் புகும் வளைவு கண்டான் 52,
செம்பியர் தென்னர் சேரர் எதிர் வந்து மாயச் செருவென்ற பாரி 86
இவனுக்கு எதிரிகள் எவரும் இல்லை எனும் அளவுக்கு ஆண்டவன் என
பகையின்றிப் பார் காக்கும் பல்லவர் கோன் நந்தி,
செயம் முன் உறவு தவிராத நந்தி 101 என்றும் காண்கிறோம்.
ஆட்சிப் பரப்பு
இவனது ஆட்சி வடக்கே வேங்கடமலையில் இருந்து தெற்கே தொண்டி வரை பரவி இருந்தது என்பதையும் இந்நூல் கூறுகிறது.
குமரி கொங்கண் கங்கை வளநாடன் 32,
நாற்கடற்க்கு ஒரு நாயகன் நந்தி
காஞ்சிபுரம், மாமல்லை, மயிலாப்பூர், முதலிய பகுதிகளெல்லாம் இவன் ஆட்சியின் கீழ் இருந்தன.
மல்லையம் கோன் நந்தி 50,
கடற்படை அவனிநாரணன் 27,
சினக்கலியின் வெஞ்சாயல் மறைத்த தனிக்குடையான்15
விடை மன் பொறி ஓலை விடேல் விடுகே 15
நந்தி தன் வட வேங்கட மலை 71
வடவேங்கட நாடுடை மன்னர் பிரான் 59
மல்லை அம் கானல் முதல்வன்
பொருகடல் மல்லைப் புரவலன் 58
தொண்டை நாடுடைய கோ 84
என்பவை இவனது ஆட்சிச் சிறப்பைக் கூறுபவை.
கட்டுக்கதைகள்
இம்மன்னனையும் இந்நூலையும் இணைத்து பல கட்டுக்கதைகள் உள்ளன. அவை வரலாற்று அடிப்படையில் எழுந்தவை அல்ல. ஆதலின் அவற்றைப் பிற நூல்களில் காணவும்.
வேத்தியல் நாட்டிய இலக்கியம்
இப்பாடல்கள் நந்திவர்மனுடைய அவையில் வீரச்சுவையும் இன்பச்சுவையும் பெருகப் பாடி ஆடல்மகளிர்களால் ஆடப்பட்டவை எனக் கொள்ளலாம். இவற்றை வேத்தியல் பாடல்கள் எனக் கூறலாம்.
முன் பதிப்புகள்
இந்நூலின் பதிப்புகள் முன்னர் வந்துள்ளன. அவற்றில் சில பதிப்புகளில் பல பாடல்களை ஒதுக்கிவிட்டு ஒருசில மட்டும் உண்மையானவை எனப் பதிப்பித்துள்ளார்கள். 1955 ஆம் ஆண்டு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் பு.சி புன்னைவனநாத முதலியார் அவர்களையும், செ.செ ராமிசாமிப்பிள்ளை அவர்களையும் கொண்டு ஒரு திருத்தப்பதிப்பு உரையுடன் அச்சிட்டுள்ளனர். அந்நூலே பயனுடைய நூலாக எனக்குப் படுகிறது. பெரும்பாலான பாடல்களை அந்தாதி வரிசைப்படுத்தி நல்ல முகவுரையுடனும் விளக்க உரையுடனும் பதிப்பித்துள்ளார்கள். அந்நூலைப் பின்பற்றியே இங்கு நூல் கொடுக்கப்பட்டுள்ளது. வரளாற்று முன்னுரை எனது ஆய்வு.
கடவுள் வணக்கம் பிள்ளைத்தமிழ்
(1) மும்மைப் புவனம் முழுதீன்ற முதல்வி யோடும் விடைப்பாகன்
அம்மை தருக முத்தம்! என அழைப்ப-- ஆங்கே மருப்பீன்ற
வெண்மை முத்தம் அவாகொள்ள வீசி நகைக்கும் வேழமுகன்
செம்மை முளரி மலர்த்தாள் எஞ்சென்னி மிசையிற் புனைவாமே
[தரவு]
(2) பொருப்பரையன் மடப்பாவை
புணர்முலையின் முகடுதைக்க
நெருப்புருவம் வெளியாக
நீறணிந்த வரைமார்ப
பருப்புரசை மதயானைப்
பல்லவர்கோன் நந்திக்குத்
திருப்பெருக அருளுகநின்
செழுமலர்ச்சே வடிதொழவே.
(3) கரியின் முனம்வரும்
அரியின் மலர்பதம்
உருகி நினைபவர்
பெருமை பெறுவரே
(4) திருவாணி யைக் குருவை
தென்முனியைப் போற்றத்
தருவாணி ஆண்மை இறை
சாரும்--உருவாணி
ஐங்கரனைச் சங்கரனை
ஆறுமுகத் தோனுமையைப்
பங்கில் வைப்பார்க் கில்லை
பவம்
(5) மண்டலமாய் அம்பரமாய்
மாருதமாய் வார்புனலாய்
ஒண்சுடராய் ஒளிஎன்றும்
ஓருருவம் மூன்றுருவ
மைவடிவோ வளைவடிவோ
மரகதத்தின் திகழ்வடிவோ
செவ்வடிவோ பொன்வடிவோ
சிவனேநின் திருமேனி
அருவரையின் அகங்குழைய
அனலம்பு தெரிந்தவுணர்
பொருமதில்கள் அவைமூன்றும்
பொன்றுவித்த புனிதற்கும்
குருமணிசேர் அணிமுறுவல்
குலக்கங்கை நதிபாயத்
திருமுடியைக் கொடுத்தாற்கும்
செம்பாகந் திறம்பிற்றே
இலகொளிய மூவிலைவேல்
இறைவாநின் இயற்கயிலைக்
குலகிரியும் அருமறையும்
குளிர்விசும்பும் வறிதாக
அலைகதிர்வேல் படைநந்தி
அவனிநா ராயணன்இவ்
உலகுடையான் திருமுடியும்
உள்ளமுமே உவந்தனையே.
[தாழிசை]
வீசிகையில் கொன்றையும்
வெள்ளெருக்கும் விராய்த்தொடுத்த
வாசிகையின் ஊடேவெண்
மதிக்கொழுந்தைச் சொருகினையே
பாய்புலியின் உரிஅசைத்த
பலபுள்ளிப் படிவம்எலாம்
ஆயிரவாய்ப் பெருங்கச்சை
அழல்உமிழ அசைத்தனையே
சோர்மதத்த வார்குருதி
சோனைநீர் எனத்துளிப்ப
ஏர்மதத்த கரிஉரிவை
ஏகாசம் இட்டனையே
[வண்ணகம்]
செழுமலர் துதைதரு
தெரிகணை மதனனது
எழிலுடல் பொடிபட
எரிதரு நுதலினை
அருவரை அடியெழ
முடுகிய அவுணனது
ஒருபது தலையிற
ஒருவிரல் நிறுவினை
[வரிப்பாங்கு]
திசைநடுங்கத் தோன்றிற்று
நீயுண்ட திறல்நஞ்சம்
உயிர்நடுங்கத் தோன்றிற்று
நீ உதைத்த வெங்கூற்றம்
அனைத்துலகிற் பிறப்பும் நீ
அனைத்துலகில் இறப்பும் நீ
அனைத்துலகிற் துன்பமும் நீ
அனைத்துலகில் இன்பமும் நீ
வானோர்க்குத் தாதையும் நீ
வந்தோர்க்குத் தந்தையும் நீ
ஏனோர்க்குத் தலைவனும் நீ
எவ்வுயிர்க்கும் இறைவனும் நீ
ஊழிநீ, உலகு நீ
உருவுநீ அருவு நீ
ஆழிநீ, அமுதம் நீ
அறமுநீ மறமு நீ
[சுரிதகம்]
ஒருபெருங் கடவுள்நிற்
பரவுதும்! எங்கோன்
மல்லை வேந்தன்
மயிலை காவலன்
பல்லவர் தோன்றல்
பைந்தார் நந்தி:
வடவரை அளவும்
தென்பொதி அளவும்
விடையுடன் மங்கல
விசயமும் நடப்ப
ஒருபெருந் தனிக்குடை
நீ ழல்
அரசுவீற் றிருக்க
அருளுக எனவே
(6) எனதே கலைவளையும் என்னதே மன்னர்
சினவேறு செந்தனிக்கோன் நந்தி--கனவேழம்
கோமறுகச் சீறிக் குடைபறித்துச் செண்டாடும்
பூமறுகில் போகாப் பொழுது
(7) பொழுதுகககண்டாய் அதிர் கின்றது மேகம் நம்
பொய்யற்(கு) எம்மைத்
தொழுது கொண்டாளென்று சொல்லு கண்டாய்!
தொல்லை நூல்வரம்பு
முழுதுகககண்டான் நந்தி மல்லையங் கானல்
முதல்வனுக்குப்
பழுதுககண்டாய் இதைப் போய்ப்பகர்
வாய்ச்சிறைப் பைங்குருகே
(8) குருகுதிர்முன் பனிக்கொதுங்கிக் கூசுங் கங்குற்
குளிர்திவலை தோய்ந்தெழுந்த நறுந்தண் வாடை
அருகுபனி சிதறிவர அஞ்சுவாளை அஞ்சலஞ்ச லென்று
ரைத்தால் அழிவதுண்டோ
திருகு சினக் கடக்களிற்றுச் செங்கோல் நந்தி
தென்னவர்கோன் தன்குறும்பிற் சென்று சூழ்ந்த
சுரிகை வினைப் பகைஞருடல் துண்டமாகத்
துயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே
(9) தொண்டை வேந்தன் சோணாடன்
தொன்னீர்க் கஞ்சி மாமல்லை
கொண்ட வேந்தன் கோன்நந்தி
கொற்ற வாயில் முற்றத்தே
விண்ட வேந்தர் தம்நாடும்
வீரத் திருவும் எங்கோனைக்
கண்ட வேந்தர் கொண்மீன்கள்
என்னும் கன்னிக் கடுவாயே
(10) கடுவாயி ரட்ட வளைவிம்ம மன்னர்
கழல்சூட அங்கண் மறுகே
இடுவார் மருப்பின் அயிராவ தத்தின்
அடுபோர்செய் நந்தி வருமேல்
கொடுவார் புனைத்த நெடுவார் படைக்கண்
மடவார் இடைக்குள் ஒழியா
வடுவாய் இருக்கும் மகளேஇம் மூன்றில்
மணியூசல் ஆடல் மறவேல்
(11) மறமத கரிதிசை நிறுவின
மணிநகை அவர்மனம் விழைவன
விறலர சர்கள்மனம் உழல்வன
விரைசெறி களிமுலை பொருவன
திறலுடை இசைதொடை புனைவன
திகழ்ஒளி மலையசம் ததைவன
நறுமலர் அணி தொடை முடியன
நயபர நின(து)இரு புயமரோ
(12)புயங்களில் பூவைமார் பொங்கு கொங்கையின்
நயங்கொளத் தரும்இறை நந்தி கச்சிசூழ்
கயங்களில் கடிமலர் துழாவிக் காமுகர்
பயங்கொளப் புகுந்தது பருவ வாடையே
(13) வாடை நோக வீசு மால்அம் மாரன் வாளி தூவு மால்
ஆடல் ஓதம் ஆர்க்கு மால்என் ஆவி காக்க வல்ல னோ
ஏடுலாவு மாலை சேர்இராசன் மல்லை நந்தி தோள்க்
கூடினால் இந்நோவுறா(து) இக்கொங்கை தானும் கோதையே
(14)கோதை சோரில் சோர்கின்றாய்
கொங்கை விம்மில் விம்முகின்றாய்
ஊதை அசைய அசை கின்ற
மருங்குல் ஓசிய ஓசிகின்றாய்
காதும் நெடுவேற் படை நந்தி
கண்டன் கச்சி வளநாட்டு
மாதர் இவரோ(டு) ஒன்றானாய்
மற்றென் வேண்டும் மடநெஞ்சே.
(15)நெஞ்சாகுல முற்றிங னேமெலிய
நிலவின்கதர் நீளெரி யாய்விரியத்
துஞ்சாநய னத்தொடு சோருமிவட்
கருளாதொழி கின்றது தொண்டைகொலோ
செஞ்சாலி வயற்படர் காவிரிசூழ்
திருநாடுடை நந்தி சினக்கலியின்
வெஞ்சாயன் மறைத்த தனிக்குடையான்
விடைமண்பொறி யோலை விடேல்விடுகே
(16)விடுதிர் கொல்லோ வளநாடுடையீர்
அரசற்கு முன்னில்
இடுதிர் கொல்லோ பண்(டு) இறுக்குந்
திறை: எரி கானத்தும் மை
அடுதிர் கொல்லோ திறல் நந்தியெங்கோன்
அயிராவதத் தில்
படுதிர் கொல்லோ படை மன்னீர்
என்னாம் உங்கள் பாவனையே
(17) வனைவார்குழல் வேணியும் வாடைகணீர்
நனைவார்துகி லும்மிவை நாளுமிரா
வினைவார்கழ னந்திவி டேல்விடுகின்
கனைவார்முர சொத்தது காரதிர்வே
(18)அதிர் குரல மணி நெடுந்தேர்
அவணிநாரணன் களிற்றின்
கதிர் ஒளிய வெண் மருப்புக்
கன வயிரம் செறிந்ததால்
மதுரை கொலோ அடுபுலிக் கோன்
நகரி கொலோ மாளிகை சாய்ந்து
எதிரெதிரே கெட நின்றது
எவ்வூர் கொல் அறியோமால்
(19)சேம உறைவாணர் செம்பொற் கழல் வேந்தர்
தாம முடிக்கணிந்த தண்ணறும்பு--கோமறுகு
பாவடிக்கீழ் ஆற்றாத பல்யானைப் பல்லவர்கோன்
சேவடிக் கீழ்க் காணலாம் சென்று
(20)சென்றஞ்சி வேற்செங்கண் வேழஞ் சிவப்பச்
சிலர் திகைப்ப
வன்றுஞ் சினத்தார் இனமறுத் தார்போலும்
அஃதஃ தே
குன்றஞ்செய் தோணந்தி நாட்டங் குறிதருக்
கோட்டையின் மேற்
சென்றஞ்சப் பட்டதெல்லாம் படும் மாற்றலர்
திண்பதியே
(21)பதிதொறு புயல்பொழி தருமணி
பணைதரு பருமணி பகராநெறி
கதிர்தொகு வருபுனல் கரைபொரு
திழிதரு காவிரி வளநாடா
நிதிதரு கவிகையும் நிலமக ளுரிமையும்
இவைஇவை யுடைநந்தி
மதியிலி யரசர்நின் மலரடி பணிகிலர்
வானகம் ஆள்வாரே
(22)ஆள்க்குலாம் கடற்படை அவனி நாரணன்
தோள்க்குலாம் மதுமலர்த் தொண்டை வாய்ச்சியர்
வாள்க்குலாம் கண்ணினால் விளைத்த மம்மர்நோய்
மீட்கலாம் மடல்கையில் விரவும் ஆகிலே
(23)விரவாத மன்னரெலாம் விண்ணேற வெள்ளாற்று
வெகுண்டோன் தொண்டைக்
கிரவாத பரிசெல்லாம் இரந்தேற்றும் பாவைமீ
ரெல்லீர் வாடை
வரவாதை யுற்றிருந்து வருந்துவார் பலரென்னும்
வாழி வாழி
பரவாதை நந்தி செங்கொல் இதுவாகில் அது பரிசு
யார்க்கும் நன்றே
(24)நன்று நெடி தாய் அவிர்கின்ற(து) இரா
நலிகின்றது மாருதசாலம் எனக்(கு)
என்றிந் நில(வு) என்னும் இளம்பிறையும்
எரியே சொரி கின்றது யாது செய்கோ
அன்றிந் நிலம் ஏழும் அளந்த பி ரான்
அடல் உக்ரமகோபன் அடலங் கலர்போல்
இன்றென் உயிர் அன்னவள் கொங்கையை விட்(டு)
யானும் துயில் கொள்கிலன் ஏழையனே
(25)ஏழை மார்துணை
வாழி நந்திதண்
நீழல் வெண்குடை
ஊழி நிற்கவே.
(26)நிற்க மன்னவர் நிரந்த வெண்குடை
மிடைந்த நீள்கடை நெடுந்தகைக
விற்கொ ணன்னுதன் மடைந்தை மார்மிக
முயங்கு தோள்பனி நாரணன்
நற்கொள்வார் மதிற் கச்சி நந்தி
நலங்கொ ளன்னவ னலங்கள்மேல்
ஒற்கம் உன் மகள் உரைசெய் தோவுல
களிப்ப னித்திற னுரைத்திடே
(27)உரைவரம்(பு) இகந்த உயர்புகழப் பல்லவன்
அரசர் கோமான் அடுபோர் நந்தி
மாவெள் ளாற்று மேவலர் கடந்த
செருவேல் உயர்வு பாடினன் கொல்லோ
நெருநற் றுணியரை ஒருவகை சுற்றிப்
பரடு திறப்பத் தன்கால் பல்கடைத்
திரிந்த பாணன் நறுத்தார் பெற்றுக்
காஅர் தளிர்த்த கானக் கொன்றையின்
புதுப்பூப் பொலன்கலன் அணிந்(து)
விளங்கொளி ஆனனன் மற்று இப்போது
இளங்களி யானை எருத்தம்மிசை அன்னே
(28)அன்ன மடமயிலை யாளி மதயானை
நந்தி வறியோர்
சொன்ன பொருணல்கு வள்ள றொகுநீர
தொண்டை வளநாட்
டன்ன நடையாளை யல்குல் பெரியாளை
யங்கை யகல்வான்
மின்னை மெலிவாளை நூலின் இடையாளை
நேர்வ மயிலே
(29)மயில்கண்டால் மயிலுக்கே வருந்தி ஆங்கே
மான்கண்டால் மானுக்கே வாடி மாதர்
குயில்கண்டால் குயிலுக்கே குழைதி யாகில்
பொருள்வயின் போக்கொழி நெஞ்சே வ்பீசூமிஸ்ரீயுஸ
திமீச்ஸ் டிநுசூனுபீசூஸ்ரீ மிஸ்டுமூமீற்டீநுசூஸ்ரீ ப்ஜபூச் டீம்ஜபூஸ்ரீ
ȑஸ் டிநுசூனுபீசூஸ Ȗற்நுபீஷழ்ஸ ம்ச்ரிஷலறுர தீக்ஷ்யீச்
அயில்கொண்ட படையாரை நுசூம்ச்முச்ப்சூனீரீ அன்னப் பேடை
அதிசயிக்கும் நடையாரை அணையல் உற்றே
(30)நூற்கடற் புலவோர் நுவல் வெண்புகழ்ப்
பாற்கடற்(கு) ஒரு பள்ளியன் நந்திதன்
கோற்கடைப் புருவந் துடிக்குந் துணை
வேற்கடற் படை வேந்தர் தம் வீரமே
(31)வீர திரன் நல் விரல் அவிர் கஞ்சுகன்
வெறிய லூர்ச் செருவென்றோன்
ஆர்வ மாவுடன் நின்றவர் அன்பன்மற்(று)
அவன்பெ ருங்கடை நின்ற
சேர சோழரும் தென்னரும் வடபுலத்
தரசரும் திறைதந்த
ஈர மாமத கரிஇவை பரிஇவை
இரவ லர் கவர்வாரே
(32)கவரிச் செந்நெல் காடணி சோலைக் காவிரி வளநரடன்
குமரிக் கொண்கன் கங்கைமணாளன் குரைகழல் விறல்நந்தி
அமரில் தொள்ளாற்(று) அஞ்சிய நெஞ்சத்(து) அரசர்கள் போகும்
இவரிக் கானத்(து) ஏகிய ஆறென் எழில்நகை இவனோடே
(33)ஓடரிக் கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்
உத்தரிய பட்டாட ஆடாமோ ஊசல்
ஆடகப்பொன் மின்ஆட ஆடாமோ ஊசல்
அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
கோபமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவர்க்கு முன்தோன்றல் கைவேலைப் பாடி
காஞ்சிபுரமும் பாடி ஆடாமோ ஊசல்
(34)ஊசல் மறந்தாலும் ஒண்கழல் அம்மானை
வீசமறந்தாலும் மெல்லியல் என்பேதை
பூசலின் ஐங்கணை வேள்பொர நந்தி நின்
பாசிலை அந்தொடை பாட மறந்திலளே.
(35)பாடிய நாவலரோ வேந்தரோ பல்புரவிப்
பீடியலார் மாகளிற்றார் பிச்சத்தார் - கூடார்
படையாறு சாயப் பழையாறு வென்றான்
கடையாறு போந்தார் கலந்து
(36)கலங்கொ ளலங்கல் வேனந்தி கச்சி
நாட்டோ வைன்கழல்
புலங்கொ ளொளிய நல்லோர்க்கும் புகல்கின்
றோர்க்கும் பொன்னார
நலங்கொண் முறுவன் முகஞ்சாய்த்து நாணா
நின்று மெல்லவே
விலங்கல் வைத்த மின்னோக்கின் மேலும்
உண்டோ வினையற்கே.
(37)வினையின் சிலம்பன் பரிவு மிவடன்
மெலிவு மென் பூந்
தினையும் வளைந்தது வாழிதன் மீறு
தெள்ளாற்று நள்ளார்
முனையு மன் றேக முனிந்த பிரான்
முனையிற் பெருந்தேன்
வனையும் வடவேங் கடத்தார் தண் சாரலின்
வார் புனமே
(38)புனத்து நின்ற வேங்கை மேற்
புடைந் தெழுந்த யானையின்
சினத்தை யன்றொ ழித்தகைச் சிலைக்கை
வீரர் தீரமோ
மனத் துணின்ற வெஞ்சினம் மலைத்தல் கண்ட
திர்ந்தமான்
வனத்த கன்ற திரிந்ததோ நந்தி
மல்லை யார்ப்பதே
(39)ஆர்க்கின்ற கடலோதம் ஆர்க்கும் ஆறும்
அசைகின்ற இளந்தென்றல் அசையும் ஆறும்
கூர்க்கின்ற வளர்மதியம் கூர்க்கும் ஆறும்
காணலாங் குருக்கோட்டை காய்ந்த வேலான்
டீமசூஸறுநுச்ஸ்ரீயீ லநுஸலிநுன்ரூறு ரயிச்ன்பூ ம்சூயிச்
ழ்பூமூன்ரூ ம்யூமிமமூஷமஜ் ழ்னுபீ ம்ச்ஸ்டீமூசூஸ்ரீ
பார்க்கொன்று செந்தனிக்கோல் பைந்தார் நந்தி
பல்லவர்கோன் தண்ணருள்யாம் படைத்த ஞான்றே
(40)ஞான்ற வெள்ளருவி யிருவி யெங்கள் பொற்
றோன்றல் வந்திடிற் சொல்லுமி றொண்சுடர்
போன்ற மன்னவன் நந்தி தன் பூதரத்
தீன்ற வேங்கை யிறாங்கணிச் சூழ்ச்சியே
(41)சூழி வன்மத யானையின் பிடர்படு சுவடிவை
சுவட்டின்கீழ்
வாழி யிந்நில மன்னவர் வந்தனு தினமிறைஞ்சிய
வடுக்கண்டோம்
ஆழி மன்னவ வன்னைய ராய்ச்சியர் அடுங்கயிற்
றடியிட்ட
பாழி மன்னெடுந் தோள்வடுக் கண்டிலம் பல்லவ
பகர்வாயே
(42)பகரங்கொ ணெடுந்திவலைபனிவிசும்பிற்
பறித் தெறிய பண்டு முந்நீர்
மகரங்கொ ணெடுங்கூல வரைதிரித்த மாலென்பர்
மன்னர் யானை
சிகரங்கள் போன்மடியத் தெள்ளாற்றுக் கண்சிவந்தான்
றென்னன் றொண்டி
நகரங்கைப் படுத்தபிரா னந்தி நர பதிபணிகோ
னங்கள் கோவே
(43)நங்கள்கோன் தொண்டைவேந்தன்
நாமவேல் மன்னர்க்கெல்லாம்
தங்கள்கோன் அங்கநாடன்
சந்திர குலப்ரகாசன்
திங்கள்போல் குடையின்நீழல்
செய்யகோல் செலுத்தும்என்ப
எங்கள்கோல் வளைகள்நில்லா
விபரிதம் இருந்த ஆறே
(44)ஆறா விறல்அடு போர்வண்மை யால்
அமர் ஆடிஅப் பால்
மாறார் களிற்றுנΰும் பல்லவர் கோன்நந்தி
மல்லைஅன் றிக்
கூறாள் இவள்; இளங் கொங்கை அவன்குளிர்
மாலை அன்றி
நாறா(து); இனி ஊரினர்க்கு நாம் என்கொல்
நாணுவதே
(45)நாணா தித்திரு மடவார் முன்புநி னன்பொற்
கழலினை தொழுதாரிற்
பூணா கத்தொளிர் பொலனா கச்செய்த புதுமென்
றொண்டைய தருளாயே
வாணா ளைச் சுளி கனி யா னைப்படை வய
வேலடையவர் குலகாலா
கோணா மைக்கொரு குறையுண் டோவுரை
கொங்கா நின்னது செங்கோலே
(46)செங்கோல் வளைக்கை யிவளுந் துவண்டு
செறியாமை வாட வெழிலா
ரங்கோல் வளைக்கை யிளையா ரிழப்ப
வரசாள்வ தென்ன வகையோ
தங்கோல் வளைத்த திகழ்சேரர் சோழர்
தமிழ்மன்னர் நின்ற நிலமேல்
வெங்கோ ளிமிர்த்த வரையுஞ் சிவந்த
விறனந்தி மேன்மொழிவையே
(47)மொழியார் தொண்டைப் பன் மலர்முற்றுந்
தெரு வந்து
விழியா ளென்றும் மேனி வெளுத்துற
மெலி வாளே
யொழியா வண்கைத் தண்ணரு ணந்தி
தணூர் மாட்டோ
வழியாந் தமரக் கடல் வட்டத்தொரு
வண் கோவே
(48)ஒரு கோமக னந்தி யுறந்தைர்கோ
நுயர்நீள் வலயத்துயர் வாளைவளை
குருசோடு வயர்படர் காவிரியிற்
குலவும்புயல் கண்டு புகார் மணலிற்
பெருசோடு நெடுங்கழி சூழ்மயிலைப்
பெருமானது பேரணி நீண்முடிமேற்
தருகோதை நினைந்தயர் வேன்மெலியத்
தழல்வீசுவ தோகுளிர் மாமதியே
(49)மதிய மெரிசொரியு மாலையும் மாலை
மறந்தும் புலராது கங்குலெங் கங்குற்
கதிர்செ யணிவண்டு காந்தாரம் பாடக்
களிவண்டு புகுந்துலவுங் காலமாங் காலம்
பதியின் வளர்ந்தநறுந் தொண்டையங்கோ னந்தி
பல்லவற்கு நேராத பாவையர்தம் பாவை
விதியின் விளைவுகண் டியாமிருப்ப தல்லால்
வினைமற்று முண்டோநம் மெல்லோதி மாட்டே
(50)மாட்டாதே இத்தனைநாள்
மானந்தி வான்வரைத்தோள்
பூட்டாதே மல்லையர்கோன்
போந்த பரிச்சுவடு
காட்டாதே கைதைப்
பொழுலுலவும் காவிரிநீர்
ஆட்டாதே வைத்தென்னை
ஆயிரமும் செய்தீரே.
(51)செய்ய வாய்மிகக் கரியகண் வனமுலை
செறிந்திறு மருங்குற்கொம்
பைய சாலவு மாவிரிழை யல்குல்
மதுமலர்க் குழலென்றால்
வெய்ய வெப்பவி யாதகுஞ் சரநந்தி
வீரவ னிவனைப்போய்
நைய நாமிவ னகரிகை தொழுதிய
நம்முயி ரளவன்றே
(52)அளவு கண்டால் குடங்கைத் துணை போலும்
அரசர் புகும்
வளைவு கண்டான் நந்தி மானோதயன்
வையம் தன்னில் முகைத்
தளவு கண்டால் அன்ன வெண்ணகையார்
தமியேன(து) உள்ளம்
களவு கண்டார் முகத்துக் கண்கள்
ஆய கயற் குலமே.
(53)குலமரவு மொவ்வாது பயின்றுவந்த
குடித்தொழிலுங் கொள்படையின் குறையுங் கொற்றச்
சிலவளவுஞ் சித்தியாத் தெவ்வர்தேயத்
தெள்ளாற்றிற் செருவென்ற செங்கோனந்தி
புலவரசைப் புறங்கண்டபுகழ் சேர்கோவே
பூவலயந் தனிற்கரியாய் நின்ற மன்னா
சொலவரிய திருநாம முனக்கேயல் லாற்
சொல்லொருவர்க் கிசையுமே தொண்டைக் கோவே
(54)கோவேமாலை மாலையர்க்கோ கோவே வேண்டு
நிலவோ கண்
கோவே மாலை மாலையது கொண்டார் குறுகு
மாற்றியேன்
கோவே மாலை நீண்முடியார் கொற்ற நந்தி
கச்சியுளார்
கோவே மாலையுள்ளூ மெங்கள் கோவே
கம்பரானாரே
(55)ஆகிடுக மாமை யணிகெடுக மேனி
யலரிடுக வாருமயலோர்
போகிடுக சங்கு புறகிடுக சேரி
பொருபுணரி சங்குவளைமென்
னாகிடறு கானல் வளமயிலை யாளி
நயமாறு மெங்களளவே
யேகொடியனாக விவையியையும்
வஞ்சியினி யுலகில் வாழ்வது ளதோ
(56)உளதே கொடிமருங்கு உண்டில்லை என்னில்
இளமுலைகள் எவ்வா(று) இருக்கும்-கிளர்ஒளிய
தென்இலைவேல் கண்ணினாள் தெள்ளாற்றில் வென்றகோன்
தன்மயிலை ஒப்பாள் தனக்கு
(57)தனக்குரிய என்கொங்கை தான்பயந்த
மழகளிற்றுக் காக்கித் தன்பால்
எனக்குரிய வரைமார்பம் எங்கையர்க்கே
யாக்கினான் இகல்வேல் மன்னர்
சினக்கரியும் பாய்மாவும் தெள்ளாற்றிற்
சிந்துவித்த செங்கோ னந்தி
மனக்கினியா னவனிட்ட வழக்கன்றோ
வழக்கிழந்த வையத் தார்க்கே
(58)தார்வட்ட கினிமருவுஞ் சொற்பகர்
தளரிடை தையல் வஞ்சிக்கின்
நேர்வட்டத் தனிமதி வெள்ளிக்குடை
கொடி தென்றாலது பழுதன்றோ
போர்வட்டச் சிலையுடை வாள்பற்றிய
பொருகடன் மல்லைப் புரவலனே
பார்வட்டத் தனிமத யானைப்படை
யுடையாய் பல்லவர டலேறே
(59)அடலேறு வலத்துயர் வைத்தபிரா
னடலுக் ரமகோபனடங் கலர்தா
மடலேறிட வாகைபுனைந்த பிரான்
வடவேங்கட நாடுடை மன்னர்பிரான்
பெடையேறு நெடுங்கழி சூழ்மயிலைப்
பெருமானது பேரருணீன் முடிமேன்
மிடலேறிய கோதை நினைந்தயர் வாண்
மெலியத் தழல்வீசும் மாமதியே
(60)மலர்ச்சூழ லமர்ந்தினிய வண்டார்க்குங் காலம்
வரிக்குயில்கண் மாவிலிளந்தளிர் கோதுங் காலம்
சிலர்க்கெல்லாஞ் செழுந்தென்ற லமுதளிக்குங் காலந்
தீவினையேற் கத்தென்றறீ வீசுங்காலம்
பலர்க்கெல்லாங் கோனந்தி பன்மாடக் கச்சிப்
பனிக்கண்ணார் பருமுத்தம் பார்த்தாடுங் காலம்
மலர்க் கெல்லாமைங் கணைவேள லர்தூற்றுங் காலம்
மகன்றுபோனவர் நம்மை யயர்த்துவிட்ட காலம்
(61) காலவினை வாணர்பயில் காவிரி நனாடா
ஞாலமொரு கோலினி னடாவு புகழ்நந்தி
நீலமயில் கோதையிவ ணின்னருள் பெறாளேற்
கோலவளை கோடலிது மன்னர் புகழன்றே
(62)புரவல னந்தியெங்கள்
பொன்னி நன்னாட்டுமன்னன்
வரமயில் போற்றுசாயல்
வாணுதற் சேடிகாணுங்
குரவலர் பொழிலிற்கோலக்
கோட்டிடை யில்லையாகி
விரவலர் மலர்களெங்கு
மில்லையோநல்கு வேனே
(63)நல்கு நந்தியிந் நானிலங் காவலன்
மாரவே ணளிர்முத்த
மல்கு வெண்குடைப் பல்லவர் கோளரி
மல்லலந் திண்டோண்மேன்
மெல்குதொண்டையுந் தந்தருள்கிலன்விடை
மணியொடும் விடியாத
வல்லினோடும் வெண்டிங்களிறொடுமுள
னுய் வகையறியேனே
(64)அறம் பெருகுந்தனிச் செங்கோன் மாயன் றொண்டை
யங்கனிபோற் சிவந்துதிரு முகத்துப்பூத்து
மறிந்துளதே பவளவாய் மருங்கிலாடும்
வல்லியிடை மணிமுறுவன் முத்துச்சால
நெறிந்துளதே கருங்குழலங் குவளைகண்க
ணெடியவேய் தொடியதோ ணேர்ந்து வெம்மை
செறிந்துளவே முலைசிலையே புருவமாகி
யவர்நம்மைச் சிந்தைநோய் திருத்தினாரே
(65) திருவின் செம்மையும் நிலமகள் உரிமையும்
பொதுவின்றி ஆண்ட பொலம்பூட் பல்லவ!
தோள்துணை யாக மாவெள் ளாற்று
மேவலர்க் கடந்த அண்ணால் நந்தி நின்
திருவருள் நெடுங்கண் சிவக்கும் ஆகில்;
செருநர் சேரும் பதிசிவக் கும்மே!
நிறங்கிளர் புருவந் துடிக்கின் நின்கழல்
இறைஞ்சா மன்னர்க்(கு) இடந்துடிக் கும்மே;
கையில வாளுறை கழிக்கும் ஆகில்
இணங் காஅர் பெண்டிர்
புணர்முலை முத்தப் பூண்கழிக் கும்மே
(66) ஓராதே என்மகளைச் சொன்னீரே நந்திமேல்
பேராசை வைக்கும் பிராயமோ-நேராதார்
ணிக்ஷ ம்மூச்மீசூஸ் டிநுசூனுபீ ணநுஸ்ரீ பிசூமூஷ ணன்பூடுயுலீஷ
டீபூசூக்ஷ ம்மூச்மீசூஸ் டிநுசூனுபீ ரூமீறுர
(67)துயக்குவித் தான்றுயில் வாங்குவித்
தான்றுயில் வித்திவளை
வயக்குவித்தா னுள்ளம வஞ்சனையான்
மலர்க் காவகத்து
முயக்குவித் தான்றுகில் வாங்குவிட்டான்
முன் நின்றிவளை
மயக்கு வித்தானந்தி மானோதய
னென்று வட்டிப்பனே
(68)வட்டன்றே நீரிதனை மிகவுங்காண்மின்
மற்றைக்கை கொட்டினேன் மாவின் வித்தொன்
றிட்டன்றே பழம்பழுப்பித் துண்ணக்காண்மி
னிவையல்ல சம்பிரத மிகவுற்றெள்ளாற்
றட்டன்றே பொன்றும் வகை முனிந்த நந்தி
அவனிநாராணன் பாராளுங் கோமான்
குட்டன்றே மழைநீரைக் குடங்கைகொண்டு
குரைகடலைக் குடிகின்றேன் குடிக்கின்றேனே
(69)குடக்குடை வேந்தந் தென்னாடுடை மன்னன்
குணக்கினொடு
வடக்குடையான் நந்தி மானோதயன் இந்த
வையம் எல்லாம்
படக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும்
பாரறியத்
துடக்குடை யாரைஅல்லால் சுடுமோ இச்
சுடற் பிறையே
(70)பிறைதவழ் செஞ்சடைப் பெம்மான் ஆரணம்
அறைகழல் முடித்தவன் அவனி நாரணன்
துறைகெழு தொடையலான் தொண்டை கண்டபின்
இறைகெழு மதிஉயிர் இவளுக்(கு) ஈந்ததே
(71)ஈகின்றது புள முந்தினை யாமும் பதிபு குநாள்
ஆகின்றது பருவம் இனியாரும் வகையறியேன்
வாழ்கின்ற தோர் புகழ் நந்திதன் வடவேங்கட மலைவாய்த்
தேய்கின்ற தோருருவத்தொடு திரிவாரது திறமே
(72)திறையிடுமின் அன்றி மதில்விடுமின் உங்கள்
செருவொழிய வெங்கண் முரசம்
மறைவிடுமின் இந்த அவனிதனில் எங்கும்
அவனுடைய தொண்டை அரசே
நிறைவிடுமின் நந்தி கழல்புகுமின் உங்கள்
நெடுமுடிகள் வந்து நிகழத்
துறைவிடுமின் அன்றி உறைபதி யகன்று
தொழுமினல துய்ந்த லரிதே
(73)அரிபயில் நெடுநாட்டத்(து) அஞ்சனம் முழுதூட்டிப்
புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
சுரபதி எனும்நந்தி தொன்மயி லாலமுச்மீச்ஸ்
உருவுடை இவள் தாயர்க்(கு) உலகொடு பகைஉண்டோ
(74)பகையின்றிப் பார்காக்கும்
பல்லவர்கோன் செங்கோலின்
நகையும்வாண் மையும்பாடி
நன்றாடு மதங்கிக்குத்
தகையும்நுண் இடைஅதிரத்
தனபாரம் அவற்றொடு
மிகைஒடுங்கா முன்னிக் கூத்
தினைவிலக்க வேண்டாவோ
(75)வேண்டா ரெண்ணும் வேந்தர் பிராற்கே மெய்யன்பு
பூண்டா ணங்காய் அன்றிவள் என்றாற் பொல்லாதே
மூண்டார் தெள்ளாற் றுள்ளே மூழ்க முனிவாறி
மீண்டான் நந்திக் கென்மகள் தோற்கும் வெண்சங்கே
(76)வெண்சங் குறங்கும் வியன்மாதர் முற்றத்து விடியவே வான்
வண்சங் கொலிப்ப மடவார்கள் விளையாடு மல்லை வேந்தன்
தண்செங்கோ னந்தி தனிக்குடைக்கீழ் வாழாரிற்
கண்சிம் புளியாநோ யாமோ கடவோமே
(77)கடற்கூதிர் மொய்த்த கழிப்பெண்ணை நாரை
மடற்கூறு தோறு மலிமல்லை கங்குல்
அடற்கூடு சாவே அமையாத வர்வை
திடக்கூறு வேனுக் கேதாவி உண்டோ
(78)உண்டிரையிற் செங்கழுநீ ரிலஞ்சி மாடே
ஒண்பொழிற் சண்பகத்தார் தடவி யோடித்
தண்டலையிற் பூங்கமுகம் பாளை தாவித்
தமிழ்த்தென்றல் புகுந்துலவும் தண்சோணாடா
விண்டொடுதிண் கிரியளவும் வீரம் செல்லும்
விடேல்விடுக நீகடவும் வீதி தோறுந்
தின்டறுகண் மாத்தொழுத பாவை மார்க்குச்
செங்கோல னல்லையோ நீசெப் பட்டே
(79)பட்ட வேந்தர்தம் பூனொடும் பாவைமார்
நாணெடுந் தெள்ளாற்றில்
வட்ட வெஞ்சிஐ நாணிடக் கழித்தவன்
மல்லையின் மயிலன்னாள்
விட்ட கூந்தலும் விழியும்நன் முறுவலும்
(வாள்)(யாக) நுதண்மிசை [யிடுகோல]
(இ) மிட்ட பொட்டினொ டிளமுலை போகமு
மெழுதவு மாகாதே
(80)காவி அனந்தம் எடுத்தான்
மதன் கைக் கரும்பெடுத் தான்
மவி நந்தவனம் புகுந் தான்
இனி வேட்டஞ் செய்வான்
ஆவி அனந்தம் உண்டோஉயிர்
தான்விட்(டு) அகலுமுன் னே
தேவில் நந்திக்(கு) இங்(கு) ஆர்ஓடி
விண்ணப்பம் செய்குவரே
(81)அம்பொன்று வில்லொடு நாண் அற்றதென்றோ
நான்கிழவன் அசைந்தேன்என் றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார்
மன்னர்! தூதா
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்
நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும் நெடுவளையும்
குனிந்து பாரே
(82)பாவையர் பரிந்து தாங்கும்
பனிமலர் செறிந்த செந்தில்
கோவையேய் நந்திககாக்கும்
குளிர்பொழில் கச்சி அன்னாள்
பூவையும் பந்துந் தந்து
புலவினாள் என்னை என்னே
மாவியல் கானம் போந்த(து)
அறிகிலேன் மதியிலேனே
(83)நீண்டதாங் கங்குல் எங்கும் நிறைந்ததாம்
வாடை பொங்கி
மூண்டதா மதியினோடே முயங்குதார்
வழங்கு தெள்ளாற்
றீண்டினார் புரியுந்தேரும் இருகைவென்
றொருகை வேழந்
தூண்டினா னந்தியிந்தத் தொண்டைநா
டுடைய கோவே
(84)கோலக்கொடி யன்னவர் நீள்செறு விற்குறு
தேன்வழி கொண்ட லருங்குவளை
காலைப்பொழு தின்னெழு கன்னியர் தங்கண்ணின்
படிகாட்டு கச்சியின்வாய்
மாலத்தெள் ளாறெறிந்த மானோதயன்
குடைக்கீழ்
ஞாலத்தோ டொத்ததே நான்பெற்ற
நறுங் கொம்பே
(85)கொம்புயர் வாமைநாக மெதிர்வந்த நந்தி
குலவீர ராக மழியத்
தம்பியர் எண்ணமெல்லாம் பழுதாகவென்ற
தலைமான வீர துவசன்
செம்பியர் தென்னர்சேரர் மாய
செருவென்ற பாரி முடிமேல்
வம்புயர் தொண்டை காணும் மடமாதர்தங்கை
வளைகொண்ட தென்ன வலமே
(86)வலம்வரு திகிரியு மிடம்வரு பணிலமு
மழைதவழ் கொடி போலக்
குலமயில் பாவையும் எறிகடல் வடிவமு
மிவையிவை கொண்டாயே
(87)கொண்டல் உறும்பொழில்
வண்டினம் போல்மணிகள்
வண்டலிடுங் கடல்
மல்லையர் காவலனே
பண்டை மராமரம்
எய்தஎம் பல்லவனே
தொண்டை ஒற்றுவள்
ஆயிழை தோள்களுக்கே
(88)தோளான் மெலியாமே சூழ்கடலாற் சோராமே
வாளா பெறலாமோ வாயற்றீர் - கேளாதார்
மத்தகரி நீள்படைகள் மாயக் குருக்கோட்டை
அத்தனையும் ஆர்த்தான் அருள்
(89)அருளான தெங்கையர்க்கே யன்னாயென்
றியம்பிடுமெங் கன்னி செஞ்சொற்
றெருளாமே னல்குநந்தி தெள்ளாற்றிற்
பொருதபோர் தன்னி லந்நா
ளிருளான மதகரியும் பாய்மாவு மிரதமுங்கொண்
டெதிர்ந்தார் தம்முன்
மருளாமே நன்கடம்பூர் வானேற
வளைந்துவெனற மன்ன ரேறே
(90)ஏறுபாய விளைவித்த தெல்லாம்
வார்க்குங் குமக்கொங்கை
வீறுபாயக் கொடுக்கின்ற விடலை
யார்கோ என்கின்றீர்
மாறுபாயப் படைமன்னர் மாவுந்
தேருந் தெள்ளாற்றி
லாறுபாயச் சிவந்ததோ ளிணைகா
வரிநா டாள்வானே
(91)ஆயர் வாய்க்குழற்(கு) ஆற்றுறு கின்றலள்
ஏயும் மாங்குயிற்(கு) என்னைகொல் ஆவதே
தேயும் ஆர்புகழ் தேசபண்டாரி தன்
பாயல் மேல்வரல் பார்த்திருந் தாளுக்கே
(92)துளவுகண் டாய்பெறு கின்றிலஞ் சென்றினிச்
சொல்லவல்ல
வளவுகண் டாய்வந்த தாதிகண் டாயடல்
வேழமுண்ட
விளைவிகண் டாலன்ன மேனிகன் டாய்விறல்
மாரன்செய்த
களவுகண் டாய்நந்தி மல்லையங் காணற்
கழிக்கம்புளே
(93)என்னை, யானே புகழ்ந்தேன்
என்னாதே எப்புவிக்கும்
மன்னர்கோன் நந்தி
வரதுங்கன் பொன்முடியின்
மேல்வருகும் தொண்டை
விரைநாறும் இன்னமும்; என்
கால்வருடும் சேடியர் தம் கை
(94) கைக்குடம் இரண்டு கனக கும்பக் குடமும்
முக்குடமாய்க் கொண்டால் முறியாதோ-மிக்கபுகழ்
சேய்க் காற்றி னால்பரவும் தீரநந்தி மாகிரியில்
ஈக்காற்றுக்(கு) ஆற்றா இடை
(95) இந்தப் புவியில்இரவலர் உண்(டு) என்பதெல்லாம்
அந்தக் குமுதமே அல்லவோ-நந்தி
தடங்கைப் புரவலனைத் தண்தமிழால் பாடி
அடங்கப் புரவலர் ஆனார்
(96) அடிவிளக்குந் துகிலாடை விளக்கு
மரசர் பந்திப்
பிடிவிளக்கும் மெங்க ளூரார் விளக்கும்
பெரும்புகழாற்
படிவிளக் குந்நந்தி யெங்கோன் பெரும்படை
வீட்டுக்கெல்லாம்
விடிவிளக் கும்மிது வோநாங்கள் பூண்பதும்
வெண் முத்தமே
(97) ஏம வரைசலிக்கு மேழாழி யுங்கலக்குங்
காம வயிரி களங்கறுக்குஞ் - சோமன்
வருநந்தி யானத்து மானாரை விட்டுப்
பொருநந்தி போந்த பொழுது
(98) ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வன மும்
தேரும் உடைத்தென்ப சீறாத நாள் நந்தி சீறிய பின்
ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வன மும்
தேரும் உடைத்தென்பரே தெவ்வர் வாழுஞ் செழும்பதியே
(99) திருத்தேர் புகழ்நந்தி தேசபண்டாரி, தெள்ளாறை வெற்பில்
மருத்தேர் குழலிக்குக் கார் முந்து மாகில் மகுடரத்னப்
பரித்தேரும் பாகும் அங்(கு) என்பட்டவோ என்று பங்கயக் கை
நெரித்தே வயிற்றில் வைத்தே நிற்பளே வஞ்சி நெஞ்சுலர்ந்தே
(100) சிவனடியை என்றும் மறவாத சிந்தையான்
சயமின் உறவு தவிராத நந்தியூர்க்
குவளை மலரில் மதுவாரும் வண்டுகாள்
குமிழி சுழியில் விளையாடு தும்பியே
அவனி மழைபெய் குளிர்காலம் வந்ததே
அவரும் அவதி சொனநாளும் வந்ததே
கவலை பெரிது பழிகாரர் வந்திலர்
கணவர் உறவு கதையாய் முடிந்ததே
(101) தொடர்ந்து பலர்இரந்த தொண்டையந்தார் நாங்கள்
நடந்த வழிகள்தொறும் நாறும் படர்ந்த
மலைகடாம் பாட்டனைய மால்யானை நந்தி
முலைகள்தாம் பட்டசையும் முன்
(102) நம்மாவி நங்கொழுநா பாலதா நங்கொழுநர்
தம்மாவி தம்பால தாகுந் தகைமையினாற்
செம்மாலை நந்தி சிறுகுடிநாட் டன்னமே
தம்மாவி தாமுடைய ரல்லரே சாகாமே
(103) மங்கையர்கண் புனல்பொழிய மழை பொழியும் காலம்
மார வேள் சிலைகுனிக்க மயில் குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன் சொரியும் காலம்
கோகனகக் கொடி முல்லை முகை நகைக்கும் காலம்
செங்கைமுகில் அனையகொடை செம் பொன்பெய் யேகத்
தியாகி யெனும் நந்தியருள் சேராத காலம்
அங்குயிரும் இங்குடலும் ஆனதொரு காலம்
அவரொருவர் நாமொருவர் ஆன கொடுங்காலம்.
(104) அன்னையருந் தோழியரு ம டர்ந்துபொருங் காலம்
ஆனிபோ யாடிவரை யாவணியின் காலம்
புன்னைகளும் பிச்சிகளும் தங்களின்ம கிழ்ந்து
பொற்பவள வாய்திறந்து பூச்சொரியுங் காலம்
செந்நெல்வயற் குருகினஞ்சூழ் கச்சிவள நாடன்
தியாகியெனும் நந்திடந் தோள்சேராக் காலம்
என்னையவ ரறமறந்து போனாரே தோழி
இளந்தலை கண் டேநிலவு பிளந்தெறியுங் காலம்
(105) ணுனீரீஜ்லநுஹ் ப்ஜபூச் மசூபு! ப்ஞ திற்டுநுமீஸ பூஸ்ரீ
ம்ஞனீயூஸ் Ȗஜரூ மசூபீ ம்ச்யூம்யிவஷ - நுசூனீயூமூவிஷ
டீமஷ் திஸ்ரீயீசூக்ஷ ணஸ்ரீடுயு மச்யீஸ ப்முச் திஸ்ரீயீசூஸ டீபூசூயச்
ப்சூஷ் திஸ்ரீயீசூக்ஷ ப்ஞ திஸ்ரீடீயீஸ்ரீ ப்சூஸ்ரீ
(106) கோட்டை யிடித்தகழ் குன்றாக்கிக்
குன்றக ழாக்கித் தெவ்வர்
நாட்டை மிதிக்குங் கடாக்களிற்
றானந்தி நாட்டினிற்பொற்
றோடை மிதித்தந்தத் தோட்டூடு
பாய்ந்து சுருளளகக்
காட்டை மிதிக்குங் கயற்கண்ணி
யேசுரங் கால்வைப்பதே
(107) செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனம் என் றாரோ தடவினார் பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி ஆகந் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மீது
(108) சதிராக நந்தி பரன்றனைக்
கூடிய தையலரை
எதிராக்கி என்னை இளந்தலை
யாக்கியென் னங்கமெல்லா
மதிராக்கித் தூசு மழுக்காக்கி
யங்கமங் காடிக்கிட்ட
பதராக்கி யென்னையும் பற்றாம
லாக்கிய பாலகனே
(109) ஓடுகிற மேகங்காள் ஓடாத தேரில்வெறும்
கூடு வருகுதென்று கூறுங்காள் நாடரிய
நந்தித் திருவாளன் மாநகரில் நன்னுதலைச்
சந்தித் திடுவீரேல் தான்
(110) மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குங்கைத்
தண்ணுலாம் மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டில்
பெண்இலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேஇந்த வேகம்உனக்(கு) ஆகாதே
(111) செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த
தையல் உறவு தவிர்ந்தோமே வையம்
மணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி
இணக்கம் புரிந்த நாள் இன்று
(112) வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
வையகம் அடைந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் சேர்ந்தாள்
செந்தழல் அடைந்ததுன் மேனி
யானும்என் கலியும் எவ்விடம் புகுவேம்
எந்தையே நந்தி நாயகமே
(113) வார்ஊரும் மென்முலை தேன்ஊரும் செவ்விதழ்
வாள்முகத் தில்
வேர்ஊரும் மேனித் தளிர்ஊரும் போரில்
விசயனுக் காத்
தேர்ஊரும் மானந்தி தேசபண்டாரி தெள்
ளாறை வெற்பில்
கார்ஊர் குழலிக்குக் காதள வூருங்
கடைக்கண்க ளே
(116) ஊரைச் சுடுமோ உலகம் தனைச் சுடுமோ
யாரைச் சுடுமோ அறியேன்நான் - நேரே
பொருப்பு வட்டமான முலைப் பூவயரே இந்த
நெருப்புவட்ட மான நிலா.