#6B8E23
சங்கப்புலவரின் துணிச்சல்
இரா நாகசாமி
2013-10-14
ஒரு சமயம் ஒரு சங்கப்புலவர் பெருமன்னன் ஒருவனிடம் வந்தார். மன்னனோ பெரும் புகழ் படைத்தவன். பெரும் வெற்றிகள் கண்டவன். அவனை மன்னா உன்னுடைய ..அப்பால் செல்லட்டும்.. நினது தாழட்டும். நீ இறஞ்சுக. உனது... வாடட்டும். உனது வெற்றியெல்லாம் தோற்கட்டும் என்றெல்லாம் சொல்லத் தொடங்கினார். இதைக் கேட்கும் போது நமக்கே கோபம் வரும். ஆனால் அம்மன்னனோ கோபிக்கவில்லை. அவற்றைக் கேட்டு புலவரின் ஆற்றலைக் கண்டு வியந்தான். மகிழ்ந்தான். அப்படி என்ன கூறினார்!
அவர் பாடிய பாடல் புறனானூற்றில் 6ஆம் பாடலாக வந்துள்ளது. பாடிய புலவர் பெயர் காரிக்கிழார் என்பதாம். அரசன் பெயர் முதுகுடுமி என்பதாம். அப்பாட்டை பகுதி பகுதியாகப் படித்தால் புரியும். வடதிசையில் உள்ள பனிவரையாகிய இமைய நெடு வரைக்கும் அப்பால்; தெற்கில் கன்யா குமரிக்கும் அப்பால்; கிழக்குத் திசையில் தோண்டப்பட்ட கடலுக்கும் அப்பால், மேற்கில் முது கடலுக்கும் அப்பாலும்; கீழே மூன்று நிலம் எனப்படும், பூலோகம், புவர் லோகம் எனப்படும் ஆகாயம், அதற்கும் மேல் சுவர் லோகம் எனப்படும் சுவர்க்க லோகம் எனப்படும் இம் மூன்று அடுக்குகளாகிய லோகங்களுக்கும் அடித்தளமாகிய பூலோகத்தின் கீழும் நடுவாகிய ஆகாயத்திற்கும், கோலோகம் எனப்படும் சுவர்க்க லோகத்திற்கும் அப்பால் உனது பெயரும் புகழும் பரவட்டும் என்கிறார்.
வடா அது பனிபடு நெடு வரை வடக்கும்
தெனா அது உரு கெழு குமரியின் தெற்கும்
குணா அது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடா அது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது முப்புணர் அடுக்கிய முறை முதல் கட்டில்
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை உலகத் தானும் மானாது
உருவும் புகழ் உம் ஆக ........
என்கிறார் புலவர். உனது புகழ் இவற்றுக்கு அப்பால் எல்லாம் செல்லட்டும் பரவட்டும் என்பது பொருள். இதன் வாயிலாக பாரதனாடு முழுதும் ஒரு பரப்பும் ஒரு பண்பும் திகழும் நாடு என்பதைச் சுட்டுகிறார். முதற் கட்டு ஆகிய நீர்னிலை சூழ்ந்த பூமியின் கீழும், மேலே ஆனிலை உலகம் எனப்படும் கோலோகத்தின் அப்பாலும், உன் பெயரும், புகழும் இத்தனை எல்லைக்கும் அப்பால் பரவி நிற்கட்டும் என்கிறார். அதாவது பாரத நாட்டின் எல்லைகட்க்கு அப்பால் எல்லாம் நின் புகழ் பரவட்டும் என்கிறார் புலவர்.
அடுத்த பகுதியில் உனது நீதி நெறிமுறை ஒரு திறம் சாராதாக நடு நிலையில் சிறந்து நிற்கட்டும் என்கிறார். "........ விரிசீர் தெரிகோல் ஞமன் போல ஒருதிறம் பற்றல் இலியரோ". "தெரி கோல்" என்பது துலாக்கோல் என உரை ஆசிரியர் கூறுகிறார். அடுத்த பகுதியில், நீ உன் ஆட்சிச் சிறப்பை எதிர்த்த மாற்றரசர்களுடைய தேசத்தின் மீது நினது கடல் போன்ற படையை ஏவி அங்கு உனது சிரிய கண்களை உடைய யானைகளை ஏவி வயல் சூழ்ந்த பல அரண்களை கைப்பற்றி அங்கு கொண்ட எழிலார்ந்த அணிகலன்களை எல்லாம் பரிசில் மாக்களுக்கு அளித்தல் செய்வாயாக. "... நிற் றிறம்சிறக்க செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேயத்து கடற்படை குளிப்ப மண்டி அடர் புகர்ச் சிறுகண் யானை செவ்விதின் ஏவிப் பசவற் படப்பை யாரெயில் பல தந்து அவ்வெயிற் கொண்ட செய்யுறு நன்கலம் பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர்".
இதை அடுத்த பகுதியிலே பெரும உன்னுடைய கொற்றக்குடை முக்கட்ச் செல்வராகிய சிவபெருமானின் கோயிலை வலம் செய்யும் போது இறைஞ்சித் தாழ்க என்கிறார். ".....அத்தை நின் குடையே முனிவர் முக்கட்செல்வர் நகர் வலம் செய்வதற்கே இறைஞ்சுக பெரும". அத்தை என்பது செய்யுள் வடிவுக்காக வந்த அசைச்சொல் அடுத்து அரசே நினது முடி நான்கு வேதத்தினை உடைய அந்தணர்கள் நின்னை நீடு வாழ்க என்று ஆசிர்வதிக்கும் கையின் முன்னே வணங்குக. ".........நின் சென்னி சிறந்த நான்மறை முற்றிய முனிவர் ஏந்து கை எதிரே வாடுக" அடுத்த பகுதியில் அரசே நினது தலையிலே சூடியுள்ள கண்னி மாலை மாற்றரசர்களின் நாட்டை சுடும் வெப்பத்தால் வாடுக என்கிறார். "........... நின் கண்ணி ஒன்னார் நாடுசுடு கமழ் புகை எரித்தலானே செலியர்".
தொடர்ந்து மன்னா உன்னுடைய சினம் முத்தாரத்தை உடைய உன் தேவியருடைய துணிந்த ஒளியை உடைய முகத்தின் கண்ணே தணிக என்றும் கூறுகிறார். ".......அத்தை நின் வெகுளி வாலிழை மங்கையர் துணித்த வாண்முகத்து எதிரே ஆங்க".
இறுதியாக புலவர் மன்னனை விளித்து முதுகுடுமி யாகிய புகழ் சால் மன்ன இவ்வாறு நீ பெற்றுள்ள வெற்றியெல்லாம் பெருமையெல்லம் நின் அகத்தே அடக்கி கொண்டு தணியாத வண்மை கொண்ட பெருவழுதி நீ குளிர்ந்த கிரணங்களை உடைய நிலவுப போலவும், ஒளிய கதிர்களை உடைய சூரியன் போலவும் நீ உலகத்தில் நிலை பெறுவாயாக என்று முடிக்கிறார்.
புலவர் மிகச் சிறந்த கவிஞர் ஆதலின் மிகவும் நயம்பட அப்பால் செல்லட்டும், வாடட்டும் தாழட்டும், இறைஞ்சட்டும் தோற்கட்டும் போன்ற சொற்களை கொண்டு மன்னனின் புகழைத் தான் பாடியுள்ளார். இவை மன்னனை தூற்றவில்லை, வாழ்த்தியுள்ளார். ஆதலின் இப்பாட்டை வாழ்த்தியல் என்றே உரையாசிரியர் கூறுகிறார். இதை வஞ்சப் புகழ்ச்சி என்ற அணியாகவே கொள்ளலாம். இவரால் பாடப்பட்ட மன்னன் பல யாகங்களைச் செய்தவன். ஆதலால்" பல் யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்று அழைக்கப்பட்டவன். வேதமரபினைப் பின்பற்றி ஆண்டவன். ஆதலின் தான் நான்மறையாகிய நாலு வேதங்களில் சிறந்த முனிவர்கள் இவனை வாழ்த்தும்போது அவர்களது கை முன்னே இவனது முடி தாழ்ந்து வணங்குமாம். இவன் சிறந்த சிவனடியான். இவன் புகழ் பாரதம் முழுவதும் பரவியது என்பதால் இந்நாடு முழுவதும் ஒரு நாடே எனக் குறிக்கிறார். கீழும் மேலும் உள்ள உலகை "பூர் புவச் சுவஹ" (பூலோகம் புவர் லோகம், சுவர் லோகம்) என்பதாலும் ஆனிலை உலகம் என சுவர்க்க லோகத்தை (கோலோகம்) குறிப்பதாலும் இவர் வேதக் கருத்துக்களை சிறந்ததாகக் கொண்டது தெளிவு. தமிழகத்தில் வேதநெறி தழைத்து ஓங்கியிருந்தமைக்கு இது ஒரு சிறந்த சான்று.