இரா.நாகசாமி
தவம் செய்த தவம்
சங்கச் சேரலன் ஈந்த கவின்மிகு காசு
கருவூர் ஏறிய பெருஞ்சேரல்
ஆன்பொருணை ஆற்றங்கரையிலே அமைந்திருந்தது அம்மூதூர். அவ்வூரை முற்றுகை இட்டிருந்தான் சோழன் கிள்ளிவளவன். அவனுடைய வீரர்கள் எய்த அம்புகளால் ஆன்பொருணை ஆற்று மணல்கள் சிதறின. ஆழமான அகழிகளில் இருந்த முதலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன. எந்த ஒரு ஊரில் இருந்து ஆண்ட அரசர்கள் இமயத்திலே தமது சின்னமான வில்லைப் பொறித்து வைத்தார்களோ அந்த சேரர்களின் தலைநகர் அது. தோல்வி என்பதே கண்டிராத வஞ்சி என்னும் கரூர். அந்த வஞ்சி இப்போரில் சோழனால் கைப்பற்றப்பட்டது. இவ்வாறு இழந்துபோன கரூரை தனது வாளின் வலிமை கொண்டு மீட்டு அறியணை ஏறினான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற மன்னன். அதனால் இவனுக்கு ஒரு நீண்ட பெயர் "கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை" என்பது அப்பெயர்.
இவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்பவனுக்கும் வேளாவிக்கோமான் பதுமன் தேவி என்பவளுக்கும் பிறந்தவன். மிகச் சிறந்த வீரன். சிங்கம் போன்றவன். வேல்படை, யானைப்படை, தேர்படை போன்றவற்றை உடையவன் ஆதலால் "கொடித்தேர் பொறையன்" என்றும் அழைக்கப்பட்டான்.
இவன் தன் முன்னோர் தலைநகரான வஞ்சியை கைப்பற்றிய சோழனையும் அவனுக்கு உதவியோரையும் தண்டிக்க எண்ணினான். இவனுடன் நெருங்கிய நட்பு பூண்டிருந்தான் திருக்கோயிலூரை ஆண்ட மலையமான் திருமுடிக்காரி. அவனுடைய உதவியுடனும் தனது தானைத்தலைவன் பிட்டன் கொற்றனுடனும் சேர்ந்து படை எடுக்கத் தொடங்கினான்.
சுரும்பார் கொல்லி
கரூர் அருகில் உள்ளது காவிரியாறு. அதைக்கடந்து ஒரு முப்பது கல் வடக்கே போனால் கொல்லிமலை இருக்கிறது. அது மிகவும் உயர்ந்த சிகரத்தை உடையது. மேகம் நிறைந்து மழை பொழிவதால் எப்பொழுதும் குளுமையாக இருக்கும். மலைமல்லிகைகளும், காந்தள் மலர்களும், இருவாட்சி பூக்களும் மலர்ந்து திகழும். மிகவும் பெரிய வண்டுகள் ரீங்கரித்து கொண்டு இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆதலின் "சுரும்பார் சோலை பெரும்பெயர் கொல்லி சுரும்பு பெறும் ஆண்வண்டு" என அது அழைக்கப்பட்டது.
அந்த மலையில் ஒருபுறத்தில் எழிலே உருவான ஒரு பாவை செதுக்கப்பட்டிருந்தது. அது ஒரு தெய்வத்தின் உருவம். அங்கு எப்பொழுதும் நிலைத்து நிற்கும் கடவுள் வடிவம் அது. அக்காலத்தில் அழகிற்கு எடுத்துக் காட்டாக கூற வேண்டுமானால் அதைத்தான் கூறுவார்கள். கொல்லிப்பாவை என்று பல புலவர்களால் பாடப்பெற்ற பெருமை வாய்ந்தது அச்சிற்பம். பெருமிதமும் சிறப்பும் கொண்டு விளங்கிய அம்மலை ஒருபால் அச்சத்தையும் விளைவிக்கும் வகையில் இருந்தது. ஆதலின் அதற்கு "பயங்கெழு கொல்லி" என்றும் பெயர் உண்டு.
கூத்தரைப் பேணிய வள்ளல்
ஓரி என்பவன் அக்கொல்லிமலையை அப்பொழுது ஆண்டு கொண்டிருந்தவன். அவனது வில் திறனால் வல்வில் ஓரி எனப்பட்டான். அவனுக்கு ஆதன்ஓரி என்றும் பெயர் உண்டு. மிக வேகமாகச் செல்லும் ஓரி என்றே பெயர் பெற்ற குதிரையை உடையவன். ஓரி இசையிலும் நாட்டியத்திலும் மிகமிக ஈடுபாடு கொண்டவன். அவனிடம் வந்த கூத்தர்களுக்கு பொன்னினால் குவளைமலர் செய்து வெள்ளி நாரிலே தொடுத்து மாலையாக அணிவித்து ஏராளமான செல்வத்தை அளிப்பான். நாட்டியம் புரிவோருக்கும் இசை வாணருக்கும் ஏராளமான செல்வத்தைக் கொடுத்ததாலேயே கடையேழு வள்ளல்களில் ஒருவனாக புலவர்களால் பாடப்பட்டான். அவன் கொடுத்த செல்வத்தால் கூத்தரும் விறலியரும் ஆடலையும் பாடலையும் கூட மறந்து விடுவாராம். அவன் மீது ஒரு வண்ணம் இசை பாடினான் ஒரு பாணன். உடனிருந்த விறலியர் யாழ் இசைத்தனர். சிறுபறையையும் பெருவங்கியம் என்னும் கருவியையும் இசைத்தனர். அவனை 21 பாடல் துறைகளிலும் பாடல் இசைத்துப் பாடினராம். பாணன் "அப்பேர்பட்ட பெருமகனே" எனப் பாட தன் பெயர் கேட்க நாணி ஏராளமான செல்வம் கொடுத்தானாம். ஆதலால் மிகச் சிறந்த புரவர்களாகிய கபிலர், பரணர், பெருஞ்சித்திரனார், கல்லாடனார் போன்றோர் அவனைப் பாடினர். அவனது கொல்லி மலையை "ஓரி கொல்லி" என்றும் பாடினர்.
கூட்டணி கலைந்தது
இவ்வளவு புகழ்வாய்ந்த ஓரி ஏனோ சேரனோடு பகமை பூண்டான். ஒளவைப் பிராட்டிக்கு நெல்லிக்கனி கொடுத்து இறவாப் புகழ் கொண்டானே அதியமான் நெடுமான் அஞ்சி. அவன் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். அது கொல்லி மலைக்கு வடக்கே 60 கல் தொலைவில் உள்ளது. அதியமானும் சேரனுடன் பகைமை பூண்டான். அதியமான், ஓரி, சோழன் பாண்டியன் ஆகியோர் கூட்டாக இணைந்து சேரல் இரும்பொறையை ஒடுக்க விரும்பினர். அதனால் இருதரப்பினருக்கும் கடும் போர் மூண்டது.
கொல்லி கொண்டு தகடூர் எறிந்தான்
முதலில் மலையமான் திருமுடிக்காரி கொல்லி மலைமீது படையெடுத்து ஓரியோடு போரிட்டான். பேராற்றல் மிகுந்த காரியோடு ஓரியால் சமமாகப் போரிட முடியவில்லை. போரில் ஓரியைக் கொன்று கொல்லிமலையைக் கைப்பற்றி சேரனிடம் ஒப்படைத்தான் காரி. அதே நேரத்தில் பெருஞ்சேரல் இரும்பொறை கொல்லிக் கூற்றத்தில் நீர்கூர் என்ற இடத்தில் அதியனையும், சோழனையும், பாண்டியனையும் போரில் முறியடித்தான். சோழனும், பாண்டியனும் தமது போர் முரசுகளையும் கொற்றக் குடைகளையும் முடி முதலிய கலன்களையும் இழந்து ஓடினர். சேரன் பெற்ற வெற்றி மிகப்பெரும் வெற்றி. அதோடு அவன் விடவில்லை. அவர்களுக்கு உதவிய அதிகனைச் துரத்திச் சென்றான். அவனுடன் அவனுடைய தானைத் தலைவன் பிட்டன் கொற்றனும் இருந்தான். இவர்கள் முன் நிற்க இயலாமல் அதியமான் அஞ்சி தகடூர்க் கோட்டைக்குள் சென்று மறைந்து கொண்டான். தகடூரை முற்றுகையிட்டான் சேரன். பின்னர் ஏற்பட்ட போரில் அதிகமான் மார்பிலே வேல் தைத்து இறந்து வீழ்ந்தான். இதை ஒளவை பார்த்தாள் பதறினாள்.
தகடூரை எறிந்ததால் "தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை" என்றும் சேரன் பெயர் பெற்றான். இதை சங்கப்பாடல்களும் தகடூர்யாத்திரை என்ற பாடலும் கூறும். இதுகாறும் ஓரியின் கொல்லியாக இருந்த மலை போரின் பின் சேரனின் மலையாக மாறியது. புலவர்கள் எல்லாம் இதை "பொறையன் கொல்லி" எனப் புகழ்ந்தனர். பெரும்புலவரான பரணர் இப்போரின் முன்னரும் பின்னரும் வாழ்ந்துள்ளார். ஆதலால் முதலில் ஓரி கொல்லி என நற்றிணையில் பாடியவர் அகநானூற்றிலும், குறுந்தொகையிலும் பொறையன் கொல்லி என்று பாடியிருக்கிறார். பிற புலவர்களான ஒவையார், தாயங்கண்ணனார், குறுங்கோழியூர் கிழார், பெருங்கிழார், மதுரைக் கணக்காயனார் போன்றவர்கள் கொல்லியை பொறையன் கொல்லி என்றே பாடியுள்ளனர். ஏன்? இளங்கோ அடிகளும் தமது சிலப்பதிகாரத்தில் சேரனைப் பாடும்போது கொல்லி ஆண்ட குடவர் கோவே என்றே பாடுவார்.
பெரும்பெயர் வானவன்
பெருஞ்சேரல் இரும்பொறை தனது தலைநகராம் கரூருக்கு வெற்றிவாகையோடு திரும்பினான். அவனுடைய முரசுக் கட்டில் எனத்தெரியாது அதில் ஏறிக் களைத்து தூங்கி விட்டான் மோசிகீரன் என்ற தமிழ்ப்புலவன். அக்காலத்தில் அவ்வாறு யாராவது செய்தால் சிரச்சேதந்தான் தண்டனை. மோசிகீரனைச் சிரச்சேதம் செய்யாமல் சிறந்த தமிழ்ப் புலமைக்காக அருகில் நின்று புலவனுக்கு சாமரம் வீசினானே சேர மன்னன் அவன்தான் இந்த பெருஞ்சேரல் இரும்பொறை.
இம்மன்னன் மீது பத்துப் பாடல்களைப் பாடினார் அரிசில் கிழார். அவரது தமிழ் ஆற்றலை பாராட்டி இம்மன்னன் தன் மனைவியோடு நின்று அப்புலவனுக்கு தனது அரியாசனத்தையே அளித்தான். ஆனால் அரிசில் கிழார் அதை மீண்டும் அவனுக்கே திருப்பி கொடுத்து விட்டு அவனுக்கு அமைச்சரானார். அவன் அவருக்கு 900000 பொன் தானம் கொடுத்தான். பெரும்சேரல் இரும்பொறை தன் தேவியுடன் நல்ல வேலைப்பாடமைந்த மான்தோல் பூண்டு பல யாகங்களை விதிப்படி செய்தான். இராசசூயம் புத்ரகாமேஷ்டி முதலிய வேள்விகளைச் செய்தான். ஆதலால் வீறு சால் புதல்வரை ஈன்றெடுத்தான். பதினேழு ஆண்டுகள் ஆட்சி செய்த பெருஞ்சேரல் இரும்பொறையே பதிற்றுப் பத்தில் எட்டாம் பத்தின் தலைவன் ஆகும்
இவ்வளவு புகழ்வாய்ந்த சேரன் வெளியிட்ட காசு கிடைத்தால் எப்படி இருக்கும்!. இதுவரைக் கிடைக்கவில்லை. ஆனால் அண்மையில் திருச்சி மாவட்டம் கரூரில் ஒரு அருமையான செப்புக்காசு கிடைத்தது. இக்காசின் தலைப்புறத்தில் ஒரு தோரண வாயிலின் உள்ளே ஒரு அரசன் நிற்கிற உருவம் உள்ளது. விளிம்பில் தமிழ் பிராம்மி எழுத்துக்களில் "கொல்ஈப்புறை" என்று எழுதப்பட்டுள்ளது. பின்புறம் வில்லும் அம்பும் உள்ளன. ஒரு விளிம்பில் கரையினுள் நீரில் இரு மீன்கள் நீந்துகின்றன. மேருமலையின் உருவம் வளைவுகளாகக் காட்டப்பட்டுள்ளது. ஒரு சதுரத்தின் உள்ளே தேய்ந்து போன உருவம் உள்ளது. தெளிவாக இல்லை. ஒரு பூனை உருவில் புலி போலக் காணப்படுகிறது. அதன் கீழ் நந்திபாதம். இவை அனைத்தும் பின்புறம் உள்ளன. இந்தக் காசுதான் அரிய செய்திகளை எடுத்துறைக்கிறது. இந்தக் காசில் உள்ளது பண்டைய தமிழ் எழுத்து மொழி தமிழ் மொழி. இதில் குறித்துள்ள அரசன் தமிழ் மன்னன். அதுவும் சங்ககாலத்தில் ஆண்டு தலைசிறந்த புலவர்களால் பாடப்பெற்றவன். ஆதலினால் இக்காசுக்குச் சிறப்பு.
புகளூர் புகட்டும் புறையன் கல்வெட்டு
23 ஆண்டுகளுக்கு முன்னர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் கரூருக்கு அருகில் புகளூர் மலையில் படிக்க முடியாது இருந்த ஒரு கல்வெட்டை படித்து தமிழக வரலாற்றுக்கு ஒப்பெரும் தொண்டாற்றினார்கள். 1965ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி சங்ககாலச் சேரர் கல்வெட்டு என்று பத்திரிக்கையில் எழுதினார்கள். அதைப் படித்து அன்று ஏற்பட்ட மகிழ்ச்சி இன்றும் என் மனத்தே பசுமையாக உள்ளது. அதன் பின்னர் பண்டைய தமிழ்க் கல்வெட்டுகளை மகாதேவன் படித்ததோடு 2000 ஆம்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையையும் வளர்ச்சியையும் வரையிட்டுக் கூறியுள்ளார்கள். அதன் அடிப்படையில்தான் இக்காசை வாசிக்க முடியும். அன்றிலிருந்து திருச்சி மாவட்டம் சங்க கால சேரர்களின் தலைநகர் கரூரே என்பதும் தெளிவாகிவிட்டது. அதன்பின்னர் கிடைத்துள்ள கல்வெட்டுக்களும் அகழ்வாராச்சியும் இதை மேலும் உறுதிப்படுத்தின. இப்பொழுது கரூரில் கிடைத்துள்ள இந்தக் காசு இனி சேரர் தலைநகர் குறித்து ஐயத்துக்கே இடமில்லை என நிரூபித்து விட்டது.
கொல்லிப் பொறையன்
இக்காசில் "கொல்ஈ" என்றும் "புறை" என்றும் இரண்டு சொற்கள் உள்ளன. அக்கால மரபில் "ஈ" என்ற உயிர் எழுத்தை குறிலாக "இ" என்றும் படிக்க வேண்டும் என்று மகாதேவன் காட்டியுள்ளார். ஆதலின் முதல் சொல் கொல்லி என்பதாகும். இரண்டாவது சொல்லான புறை என்பதின் முன் "ப்" மெய் இரட்டித்து கொல்லிப்புறை என எழுதப் பெற்றுள்ளது. புகளூர் கல்வெட்டில் "கோ ஆதன் சொல்லிரும் பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என மூன்று சேர அரசர்கள் குறிக்கப்படுகின்றனர். இதே கல்வெட்டு அங்கு மேலும் கீழுமாக இருமுறை எழுதப்பட்டுள்ளது. கீழே "இரும்பொறை" என்பதற்கு பதில் "இரும்புறை" என எழுதப்பட்டுள்ளது. ஆதலின் பொறையன் என்ற சேரர் பெயர் புறையன் எனவும் அக்காலத்து வழங்கப்பட்டது என்பதும் தெரிந்ததாம்.
இக்காசு "கொல்லிப் பொறையன்" என்பவனால் வெளியிடப் பட்டது என்பது தெளிவு. இக்காசின் பின்புறம் வில் சிறப்பாக உள்ளது. ஆதலின் இது சேரமன்னன் வெளியிட்டது என்பதும் பெறுகிறோம். முன்னர் குறிப்பிட்டதிலிருந்து "கொல்லிப்புறை" என்பது கொல்லியை உடைய அல்லது வென்ற பொறையன் எனப் பெயர் பெறும். அது பெருஞ் சேரல்லிரும்பொறை என்பது வெளிப்படை. அக்காலத்து மன்னர்கள் தமது வரலாற்றில் சிறப்பு நிகழ்ச்சியை தமது காசுகளில் வெளியிடும் வழக்கம் உண்டு. ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழன் என்ற காசை வெளியிட்டான். சுந்தரபாண்டியன் சோனாடு கொண்டான் எனப் பெயர் பொறித்து காசு வெளியிட்டான். கிருஷ்ண தேவராயர் திரு வெங்கடேசப் பெருமானுக்கு நவரத்ன மகர தோரணம் தனது காசில் பொறித்துள்ளான். அதுபோல இரும்பொறை கொல்லிமலையை வென்ற நிகழ்ச்சியை சிறப்பிக்க கொல்லிப்புறை என்னும் இக்காசில் வெளியிட்டிருக்கிறான் எனத் தோன்றுகிறது.
எழுத்தமைதி கொண்டு இது 2000 ஆண்டுகட்கு முன் கிறிஸ்தவாப்தத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது எனக் கொள்ளலாம். இக்காசின் பின்புறம் உள்ள மீன் இவன் பாண்டியனை வென்றதையும், தெளிவாக இல்லாவிடினும் புலி சோழனை வென்றதையும் குறிக்கின்றனவோ? நடுவில் பெரியதாக உள்ள வில் சேரரின் அரசுச் சின்னம். பிற சின்னங்கள் அக்கால காசுகளில் காணப்படும் மங்கலச் சின்னங்கள். எழுத்துள்ள முன்புறம் தோரணவாயிலின் கீழ் நிற்கும் அரசனின் உருவ ரோமானிய கலைத் தொடர்பை வெளிப்படுத்துகிறது. ரோமானியர் சங்ககாலத் தமிழகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என அறிவோம். கரூரிலேயே ஏராளமான ரோமானிய காசுகளும் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இக்காசு கி.பி. முதல் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது எனக் கொள்ளலாம். இதுவரை சங்ககால சேரமன்னர்களின் பெயர் பொறித்த காசு கிடைக்கவில்லை. முதன்முலில் தெளிவான எழுத்துக்களுடன் கிடைத்துள்ள காசு இதுவேயாகும். அக்காலத்து சிற்பம் எப்படி இருக்கும் என்றும் பாடல்களில் உள்ளதைத் தவிர தெரியாது இக்காசில் உள்ள உருவத்தைப் பார்க்கும் போது சங்க கால சிற்பங்கள் எழிலாக இருந்திருக்க வேண்டும் என்பதை ஐயமின்றி தெரிவிக்கின்றன.
கொல் ஈ
மேலும் ஒரு குறிப்பு. கொல்லிமலை என ஏன்பெயர் வந்தது என்றும் இக்காசிலிருந்து ஊகிக்கலாம். மலைப்பெயர்கள் பெரும்பாலும் காரணப்பெயர்களாக இருக்கின்றன. ஆதலின் அந்நோக்கில் காணலாம். பெரிய ஆண் வண்டுகள் ரீங்கரித்துக் கொண்டு இருக்கும் எனப் பெயர் பெற்றது இம்மலை எனச் சங்கப்புலவர் பாடியுள்ளனர். இவ்வண்டுகள் கடித்தால் ஆட்களைக் கொல்லக் கூடிய அளவுக்கு அச்சம் தருபவை. ஆதலால் "கொல் ஈ மலை" என்பது கொல்லிமலை என ஆயிற்று என்று கொள்ளலாம். கொல்ஈ என இக்காசு குறிப்பது அதையே என்றும் தோன்றுகிறது.
சங்க இலக்கியங்களையும் வரலாற்றையும் கலையையும் பொருளாதார நிலையையும் ஓரியையும் பெருஞ்சேரல்லிரும்பொறையையும் ஒருங்கே நமக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் நினைவூட்டும் வானவன் ஈந்த இச்சிறு காசு வான் நிறை பெரும் புகழ் காசெனில் மிகையல என்பாம்.