இரா.நாகசாமி
தவம் செய்த தவம்
அர்த்தநாரி சூரியன்
அர்த்தநாரி சூரியனா? இது என்ன புதிர்? சிவபெருமான் தானே அர்த்தநாரீச்வரராகத் தோன்றுகிறார். அவரைத்தான் உமையொருபாகன் என்று கூறுகிறோம், வணங்குகிறோம். என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? மேலே படியுங்கள்.
மனிதன் கள்ளம் கபடமே தெரியாத குழந்தை போல 5000 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்தான். சிறு குழந்தை எப்படி தான் பார்ப்பதை எல்லாம் உயிர் துடிப்பு உள்ளதாக உருவகித்து மகிழுமோ அது போலத்தான் அவன் நிலை இருந்தது. மகிழ்ச்சியும் உண்டு. இனம் தெரியாத பயமும் உண்டு. மனிதனுக்கு அறிவு தோன்றிய நாள் முதல் பிரத்யட்ச தெய்வமாகத் தென்பட்டதே சூரியன்தான். அது போலத்தான் விண்ணில் தோன்றும் நட்சத்திரங்களும். குழந்தை உள்ளத்தில் கற்பனை தோன்றுகிறது. விண்ணில் வருகின்ற சிம்மம்போல் காட்சியளிக்கிறது சூரியன். அவன் இருளாகிய அசுரனின் உடலைக் கிழித்துக் கொண்டு நரசிம்மம் போல் வெளிப்படுகிறான் எனக் கற்பிக்கிறான். இதற்கு உருவமும் கெடுக்கிறான். இதைத்தான் 5000 ஆண்டுகட்கு முற்பட்ட சுமேரிய நாகரிகத்தில் காண்கிறோம். அங்கு சூரியன் சிம்மமாக காண்பிக்கப் படுகிறான் என்பர் வல்லோர். சிம்மமாக விலங்கு உருவிலா? இல்லை மனித உடலும் சிம்மத் தலையுமுடையவனாக அமைகிறது சூரியனின் உருவம்.
இதற்கும் சற்றும் பிற்பட்ட காலத்தில் இந்திய நாட்டில் தோன்றிய வேதங்கள் தூய்மையான மனித இதயத்தில் இருந்து எழும்பிய அழிவில்லாக் கவிதைகள் வேதங்களில் குறிக்கப் படும் இந்திரன், அக்னி, விஷ்ணு, சோமன் போன்ற தெய்வங்கள் பல. சில பெண் தெய்வங்களும் உண்டு. அதில் மிகவும் எழிலான உருவான பெண்ணாக பெண்மையின் இன்பத்தை எல்லாம் திரட்டி உருவாக்கினால் எவ்வாறு இருக்குமோ அப்படிப் பட்டவளாக வடிக்கப்பட்டுள்ளது உஷை என்னும் தெய்வம் ஆகும். உலகிலேயே பெண்ணின் மென்மையைச் சித்தரித்த ஈடு இணையற்ற கவிதை உஷஸ்யைக் கூறும் வேதம்தான். அவள் யார்? சூரியன் உதிப்பதற்கு முன் அதிகாலையில் தோன்றுகிறாளே ஒளி அவள்தான் உஷை. அவள் எப்பொழுதும் இளம் பெண்ணாகவே காணப்படுகிறாள். நன்கு அலங்கரித்துக் கொண்டுள்ள நாட்டியப் பெண்போல் திகழ்கிறாள். அவள் வெளிப்பட்டதும் பறவைகள் எல்லாம் தமது சிறகுகளை அடித்துக் கொண்டு கூடுகளை விட்டுப் பறக்கின்றன. அவள் எப்பொழுதும் சத்யமானவள் நெறி தவறாதவள். அவள் தனது காதலனாகிய சூரியனுடன் எப்பொழுதும் திகழ்கிறாள் என்கிறது வேதம்.
வேதம் தனித்தனியாகத் தெய்வத்தைப் பாடுவது போல் சில கவிதைகளில் இரட்டை தெய்வங்களையோ, அல்லது மேற்பட்ட தெய்வங்களையோ இணைத்துப் பாடுவதும் உண்டு. "மித்ரா வருணன்", "தியாவா பிருத்வி" என இவ்வாறு பல இரட்டைத் தெய்வங்களை வேதம் பாடுகிறது. இப்பொழுது உமையொரு பாகனாகிய அர்த்தநாரீசுவரர் உருவை நாம் வணங்குகிறோம். ஆணும் பெண்ணுமாக இரண்டு உருவங்கள் எவ்வாறு ஒரு வடிவில் தோன்றியது, இந்தக் கருத்து எதிலிருந்து உருவாகியது என்று சரிவர இது காறும் விடை கிடைக்கவில்லை. அண்மையில் நான் வேதத்தைப் படித்த போது இக்கேள்விக்கு விடை கிடைத்தது.
வேத காலத்திலேயே பல ஆராய்ச்சிகள் நடந்ததாக வேதங்கள் கூறுகின்றன. யஜுர் வேதம் அது போன்ற ஒரு ஆராய்ச்சியைக் கூறுகிறது. "வஸோர்த்தாரா" என ஒரு ஹோமம் குறிக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர் கூடி இந்த ஹோமம் எதற்கு? எந்த தேவதையைக் குறித்தது? என்று வேதத்திலேயே கேட்கின்றனர். அதற்கு வேதம் கூறியது. வஸோர்தாரா என்ற மந்திரம் "அக்னா விஷ்ணு" என்ற இரட்டை தேவதையைக் குறித்தது. அதனால் இந்த ஹோமம் அக்னி-விஷ்ணு ஆகிய இரண்டு தேவதைகளும் இணைந்த உருவத்துக்கு செய்யப்படுவது. அக்னி என்பது ருத்ரன்தான் என்கிறது வேதம். அக்னா-விஷ்ணு என்ற ஓரே வடிவான தேவதை உண்மையில் ருத்ரனும் விஷ்ணுவும் இணைந்ததாகும். இதைத்தான் பின்னர் சங்கரநாரயணன் என்று கூறுகிறோம். அக்னா விஷ்ணு என்ற இந்த இரட்டை தெய்வத்தின் உருவில் ஒன்று ஆண்மையாகவும் மற்றது பெண்மையாகவும் திகழ்கிறது. இங்கு ஓரே வடிவில் ஒரு பகுதி ஆணாகவும் மறுபகுதி பெண்ணாகவும் உருவகப்பட்டுள்ளதைக் காண்கிறோம். இதுதான் அர்த்தநாரீசுவரர் உருவில் கற்பிக்கப்பட்ட கவிதை.
ஆதலின் "சங்கரநாராயணன்" என்ற வடிவமும் "அர்த்தநாரி" என்ற வடிவமும் ஓரே வடிவம்தான். வேதத்திலிருந்து தோன்றிய கருத்துதான். எவ்வாறு ருத்ரனாகிய சிவபெருமானுக்கு அர்த்தநாரி வடிவம் கவிதையில் மலர்ந்ததோ அது போல திருமாலுக்கும் அர்த்தநாரி உருவமும் தோன்றியது. இது என்ன என்று நினைக்கிறீர்களா அர்த்தநாரி ஈசுவரர் போல "அர்த்தநாரி விஷ்ணு" உருவமும் உண்டு. வலது பாதி விஷ்ணுவாகவும் இடது பாகம் லட்சுமியின் உருவமாகவும் அர்த்தநாரி விஷ்ணுவாகவும் இந்தியாவில் சிற்பங்களில் பல இடங்களில் காணப்படுகிறார். பீகாரில் புகழ் வாய்ந்த கயை என்னும் புண்ணியப்பதியில் ஒரு கோயில் இருந்தது. கி.பி 1080ல் அதாவது, தமிழ்நாட்டில் குலோத்துங்க சோழன் ஆண்ட போது யக்ஷபாலன் என்பவன் அந்தக் கோயிலைக் கட்டினான். அங்கு லஷ்மியுடன் கூடிய அர்த்தநாரி நாராயணன் சிலையைப் பிரதிஷ்டை செய்தான் என்று கல்வெட்டே கூறுகிறது. நேபாளத்திலும் அர்த்தநாரி நாராயணர் உருவம் குறிக்கப்பட்டுள்ளது என்பர். அர்தநாரியின் சிலையும் வழிபாடும் வடஇந்தியாவில்தான் இருக்கிறது என்று எண்ண வேண்டம். நம் தமிழ்நாட்டிலும் இந்த வழிபாடு உண்டு. வைஷ்ணவ சம்பிரதாயத்தில் கோயில் என்றால் ஸ்ரீ ரங்கம்தான். அங்குள்ள தேரில் அர்த்தநாரி விஷ்ணு சிற்பம் இன்றும் உள்ளது.
சைவமும் வைணவமும் இந்தியாவில் சிறந்து திகழ்வது போல சூரிய வழிபாடும் திகழ்கிறது. சூரியனை முழுமுதற்கடவுளாக வணங்கும் வழிபாடு சௌசரம் எனப்படும். இந்தியாவின் பல இடங்களில் சூரியனுக்கு பெருங்கோயில்கள் கட்டப்பட்டன. காஷ்மீரத்தில் லலிதாதித்ய முக்திபாதன் என்ற அரசன் எடுத்த "மார்த்தாண்டர்" கோயில் சூரியனுக்கு எடுக்கப்பட்டது. கி.பி. 750ல் அதாவது, அதாவது தமிழ்நாட்டில் பல்லவர் ஆண்ட காலத்தில் அது எடுக்கப்பட்டது. அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்ததாக வரலாறு கூறுகிறது. கி.பி. 1090 ல் அங்கு ஆண்ட கலசன் என்ற அரசன் அங்கு இருந்த சூரியபகவானுடைய செப்புத்திருமேனியை உடைத்தான். ஆதலால் பின்னர் தங்கத்தினாலேயே சூரியன் உருவம் செய்து இக்கோயிலில் வைத்தான். இருந்தாலும் அவன் நோய்வாய்பட்டான். ஆதலால் தன்னை இத்தெய்வத்தின் காலடியில் கொண்டுவிட கேட்டுக்கொண்டான். கோயிலில் சிலையின் காலடியில் இவனை வைத்ததும் அங்கேயே இறந்து போனான் என்று வரலாறு உள்ளது. புகழ்வாய்ந்த சூரியன் கோயில்களில் இந்த மார்த்தாண்டர் கோயில் ஒன்று.
மற்றது கலிங்கத்தில் கடற்கரை ஓரத்தில் கோனாரக்கில் உள்ள சூரியன் கோயில். அதில் முன்மண்டபப் பகுதியே உள்ளது. கர்பகிருஹத்தின் மேல் விமானம் இடிந்து விட்டது. ஆயினும் பிற கலிங்க தேச விமானம் போல்தான் அதுவும் இருந்திருக்க வேண்டும். மிகப் பிரும்மாண்டமான அந்தக் கோயிலைக கீழை கங்க அரசன் நரசிம்மதேவன் என்பவன் கி.பி. 1250ல் கட்டினான் என்பர். சோழராட்சி தமிழகத்தில் முடிவடையும் கட்டத்தில் அக்கோயில் அங்கு எழுந்தது எனலாம்.
தமிழநாட்டில் முதலாம் குலோத்துங்கன் சூரியனார் கோயிலை எடுத்தான். இது ஒரு சிறிய கோயில்தான்.
அர்த்தநாரி சூரியனை கூற வந்து கோயில்களைப் பார்கிரோமே என்று எண்ணத் தோன்றும். ஆம் சூரியன் உருவமும் வழிபாடும் வளர்ந்த பின்னிலையில்தான் இதையும் பார்க்க வேண்டும்.
images/martanda.jpg
கும்பகோணத்துக்கு அருகில் இப்பொழுது தாராசுரம் என்ற கோயில் இருக்கிறது. அதை இரண்டாம் இராஜராஜ சோழன் 1165 வாக்கில் கட்டினான். அது சாக்த மரபை பிரதிபலிக்கும் கோயிலாகத் திகழ்கிறது. அதன் முன்மண்டபத்தில் நாம் கோயிலினுள் நூழைந்ததும் கண்ணில் படுவது அர்த்தநாரி உருவம். அதைப் பார்த்ததும் சிவபெருமான் அர்த்தநாரியாகத் திகழ்வதைத்தான் நினைவூட்டும். இது என்ன மாயை என்று தோன்றும். அப்படித்தான் நானும் முதலில் நினைத்தேன். எழுதியும் உள்ளேன். ஆனால் அதை ஆய்ந்த போது ஒரு உண்மை தெரிந்தது. தாராசுரம் கோயிலில் பல தெய்வச் சிலைகள் உள்ள கோஷ்டங்கள் மேலே காவி வண்ணத்தில் அத் தெய்வங்களின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன.
சோழர் கால கிரந்த எழுத்துக்களில் இப்பெயர் உள்ளது. இந்த அர்த்தநாரியின் உருவத்தின் மேலும் எழுத்து மங்கிய நிலையில் இன்றும் உள்ளது. அதிலிருந்து இது சூரியனுடைய உருவம் என்று அறிந்தேன். அர்த்தநாரியாக திகழும் இந்த உருவம் சூரியனுடையது. மூன்று தலைகள் தலையின் பின்புறம் சூரியனுடைய பிரபை வலப்பகுதி ஆணாகவும் இடப்பகுதி பெண்ணாகவும் உள்ளது. ஒரு வலது கரத்தில் தாமரை உள்ளது. ஆம் தமிழ்நாட்டிலேயே அர்த்தநாரி சூரியனை சோழர் காலத்தில் வணங்கியுள்ளனர். சோழர் பேரரசர்களே வணங்கியுள்ளார்கள்.
சூரியனை இவ்வாறு வணங்கும் மரபு உண்டாம். உமையொருபாகனாக சிவபெருமான் போல, லக்ஷ்மீ பாகனாகத் திகழும் விஷ்ணு போல, உஷாதேவியை ஒரு பாகமாக கொண்டு திகழ்கிறார் சூரிய பகவான். எந்த உஷாதேவி சூரியனின் முன்னர் வெளிப்பட்டு உலகின் இருளை அகற்றுகிறாளோ அவளையே தனது அருள் சக்திவடிவாகக் கொண்டு சூரிய நாராயணன் நமது அஞ்ஞானமான இருளை அழித்து ஒளிமயமான அறிவாக, கவிதையாக மலர்வதைத்தான் இவ்வுரு சித்தரிக்கிறது. இவ்வுருவையே "மார்த்தாண்ட பைரவர்" என்று நூல்கள் கூறுகின்றன. இதுவே உன்னதத் தத்துவம். கண்கண்ட தெய்வமான சூரியனினும் ஆணும் பெண்ணுமாக இணைந்த உருக் கொண்டு அருள் பாலிக்கும் பாங்கை பொங்கல் திருநாளில் நினைவில் நிறுத்தலாமே.